1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (15:10 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - மீனம்

பிறரின் குறைகளை குறைத்துப் பார்ப்பதுடன், நிறைகளை நிறைவாகப் பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஒரளவு அடிப்படை வசதி, வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் தந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! சங்கடங்களையும், சச்சரவுகளையும் தருவாரே! என்று கலங்காதீர்கள். அதன்படி எதிலும் சின்ன சின்ன தடைகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள்.

அவ்வப்போது நெருக்கடிகள், தர்ம சங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதியும் தர வேண்டாம். குடும்பத்தில் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. சகட குருவாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், வீண் சந்தேகத்தால் பிரிவு, டென்ஷன், எதிர்ப்பு, உடல் நலக்குறைவுகள் என வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்வோ வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும்.

ஒரு கடனை அடைக்க மற்றொரு இடத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். தலைச்சுற்றல், நெஞ்சு எரிச்சல், நீரிழிவு நோய் வரக்கூடும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். மனைவிக்கும் கர்பப்பை சம்பந்தப்பட்ட ஃபைப்ராய்டு, நீர் கட்டிகள், தைராய்டு போன்ற பிரச்னைகள் வந்துப் போகும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்.

உங்களது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். கழிவு நீர் அடைப்பு, கூடுதல் அறை கட்டுவதற்காக வீட்டை இடித்து மாற்றுவீர்கள். சிலர் நீங்கள் முன்பு போல் இல்லையென்றும் மாறி விட்டதாகவும் கூறுவார்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் இதமாகப் பேசி காரிய சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். ஆரோக்யம் சீராகும். 
 
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப் போன உங்கள் மகளின் கல்யாணத்தை பிரபலங்களின் முன்னிலையில் நடத்துவீர்கள். பாதியிலேயே நின்று போன கட்டிட வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.  

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்துப் போகும். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஊர் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.  
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்களால் திணறுவீர்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். மனைவியைக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யூரினரி இன்பெக்ஷன், அலர்ஜி வந்துப் போகும். உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப் போன அரசு காரியங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது வேலைக் கிடைக்கும். பழைய ஆபரணங்களை மாற்றிவிட்டு புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.  

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் வீண் விரையங்கள், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, கணவன்-மனைவிக்குள் வாக்குவாதம், சின்ன சின்ன ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். 
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.      
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிறர் தன் வேலையாகும் வரை தன்னை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எரிகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். 

வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். போட்டிகள் இருக்கும். வேலையாட்களை நீங்கள் பாகுபாடு பார்க்காமல் சரிசமமாக நடத்துபவர்கள் தான். ஆனால் அதுவே சில நேரங்களில் தர்மசங்கடமாகும். பாக்கிகளை அலைந்து, திரிந்து வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இரும்பு, உணவு, கண்ஸ்டக்ஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கத்து கடைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். 
 
உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் உங்களை மதிக்காமல் போவார்கள். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள உயர்வையும் போராடி பெற வேண்டி வரும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பிருக்கிறது.  
 
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். 
 
மாணவ-மாணவிகளே! மொபைல் போனில் பேசுவது, டி.வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள். 
 
கலைத்துறையினரே! மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் அதிகமாகும். படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்து போங்கள். 
பரிகாரம்:
கோயம்புத்தூர் அருகிலுள்ள மருதமலையில் வீற்றிருக்கும் பாம்பாட்டி சித்தரையும், முருகப் பெருமானையும் மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள்.