1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (15:15 IST)

தனுசு - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

தாராள மனசுக் கொண்ட நீங்கள், பேச்சால் சாதிப்பதில் வல்லவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு பணப்புழக்கத்தையும், அந்தஸ்தையும் பெற்று தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருப்பதால் நீங்கள் எதிலும் முன்எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும்.

ராசிக்கு 12-ல் சனி மறைவதால் உங்களுடைய அடிப்படை நடத்தைக் கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். கூடாப்பழக்க வழக்கம் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடியும். ஆனால் செலவுகளை சுருக்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் நம் கௌரவம் என்னாவது என்று பெருமைக்காக கைக்காசை கரைக்காதீர்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம்.

இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் இனந்தெரியாத கவலைகளையும், வீண் பயத்தையும் தந்தாரே! எந்த வேலைகளை தொட்டாலும் முழுமையாக முடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினரே! குடும்பத்திலும் சிறு வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! ஆனால் தற்சமயம் விரைய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளிடம் மறைந்துக் கிடக்கும் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள்.

ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வீடு மாற வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். சிலர் வாஸ்துபடி வீட்டை சரி செய்வீர்கள். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாகி முடியும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். என்றாலும் ஏழரைச் சனியின் தொடக்கமாகவும், விரையச் சனியாகவும் இருப்பதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கப்பாருங்கள். உங்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களை மனைவி சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளபாருங்கள்.

எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடித் தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முடிந்த வரை பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் ராசிநாதன்-சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் விருச்சிக ராசி 12-ம் வீட்டில் சனி செல்வதால் அழகு, ஆரோக்யம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணவரவு உண்டு. அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். 
 
உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். 
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். 

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பொருள் இழப்பு, வீண் டென்ஷன், முன்கோபம், தோலில் நமைச்சல், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.  
 
சனிபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு என்றாலும் பற்றாக்குறையும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்றப் போக்கு நிலவும். பேச்சில் கடுமை காட்ட வேண்டாம். கண் பார்வைக் கோளாறு, காது வலி, மூக்கு வலி வந்துப் போகும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், இரத்த அழுத்தம், படபடப்பு வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். 
 
வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. கடைக்கு வரும் அனுபவமில்லாத புதுத் துறையில் கால்பதிக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, போடிங், லாஜிங், வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்சனை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். என்றாலும் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சம்பளம் உயரும். சலுகைகளும் உண்டு. சக ஊழியர்கள் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வர். 
 
கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்வியை முழுமையாக முடிக்கப்பாருங்கள். காதல் கசந்து இனிக்கும். பிறமொழிக்காரர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். பின்வரிசையில் அமராதீர்கள். 
இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், கொஞ்சம் அலைச்சலையும் தந்தாலும், வருங்கால முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். 
 
பரிகாரம்:
சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை திருவாதிரை நட்சத்திர நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள்.