ஆன்மீகத்தைப் பொருத்தவரை கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையே பிரிக்க முடியாத ஒரு சிறப்பு பந்தம் உள்ளது. எவ்வளவு தொலைவையும், எத்தனை இடர்பாடுகளையும் தாண்டி கடவுளின் இருப்பிடத்திற்கு அது, அவனை சுண்டி இழுத்துவிடும்.
'புனிதப் பயணங்கள்' வரிசையில் சிவபெருமான் வீற்றிருக்கும் மஹாகேதாரேஸ்வரர் ஆலயத்தை இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரடலம் என்ற இடத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சைலானா என்ற இடத்தில் மஹாகேதாரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மலைகள் சூழ, மேகங்கள் தவழ, இயற்கை எழில் சூழ்ந்த இவ்விடத்தில் மஹாகேதாரேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலின் அருகிலேயே அழகான நீர் வீழ்ச்சியும் உள்ளது.
இந்த ஆலயம் சுமார் 278 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடம் என்று கூறப்படுகிறது. 1730 ஆண்டுக்கு முன் இங்கு சுயம்பு சிவலிங்கம் மட்டுமே இருந்ததாம். 1736ஆம் ஆண்டில் சைலானா மன்னர் ஜெயசிங் மஹாகேதாரேஸ்வரர் கோயிலைக் கட்டினார்.
கடந்த 1959- 95ஆம் ஆண்டுகளில், மன்னர் துலிசிங் வழங்கிய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதியைக் கொண்டு இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. கோயில் அருகே குளமும் கட்டப்பட்டது. மன்னர் ஜஸ்வந்த் சிங் காலத்தில் ஆலய அர்ச்சகர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. 1991- 92ஆம் ஆண்டில் ரத்லாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சம் செலவில் ஆலயத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்தன.
இக்கோயிலைப் பற்றி அர்ச்சகர் அவந்திலால் திரிவேதி கூறுகையில், "மன்னர் சைலானா காலத்தில் இருந்து இவ்வாலயம் இங்குள்ளது. எங்களின் நான்காவது தலைமுறையினர் இறைவனுக்கு தொண்டு புரிந்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ராவண மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சிவனை தரிசிக்கின்றனர்" என்றார்.
ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி, வைசாக பூர்ணிமா மற்றும் கார்த்திக பூர்ணிமாவின் போது நடைபெறும் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவனருள் பெறுகின்றனர்.
எப்படிச் செல்வது?
சாலை மார்க்கம் : ரட்லம் நகரில் இருந்து டாக்சி, பேருந்துகள் அடிக்கடி உள்ளன.
ரயில் மார்க்கம் : டெல்லி - மும்பை வழித் தடத்தில் ரடலம் ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலைச் சென்றடையலாம்.
விமானம் மூலம் : இந்தூரில் உள்ள தேவி அகிலாபாய் ஹோல்கர் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலை சாலை மார்க்கமாகச் சென்றடையலாம்.
|