இந்த வார புனிதப் பயணத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆத்துக்கால் பகவதி அம்மன் திருக்கோயிலை பார்க்கப் போகிறோம்.
பெண்களின் சபரிமலை என்று இந்த ஆத்துக்கால் பகவதி அம்மன் கோயில் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான் என்பதுதான் இதற்குக் காரணம்.
இந்த கோயிலில் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பொங்கல் விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இதனால் உலகில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று பொங்கல் வைத்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இக்கோயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கோவலனை கள்வன் என்று கூறி மரண தண்டனை விதித்த பாண்டிய மன்னனின் அரசை கண்டித்து மதுரையை எரித்த பின், கண்ணகி திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூருக்குச் சென்றார். அப்போது ஆத்துக்கால் வழியாகச் சென்ற கண்ணகி அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைக் கொண்டாடும் வகையில்தான் இந்த கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு கண்ணகியை வழிபடுகின்றனர்.
பகவதி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ள இடத்தில் பெண்கள் சக்கரைப் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். சர்க்கரைப் பொங்கலில் தேங்காய், வெல்லம், பழங்கள், நறுமணத்தைச் சேர்க்கும் பொருட்களையும் போடுகின்றனர். இந்த விழாவின்போது பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பூசாரிகளைத் தவிர இவ்விழாவில் வேறு எந்த ஆணையுமேக் காண முடியாது.
|