பந்தளம் அரண்மனையில் (இன்றைக்கும் அந்த அரண்மனை நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது) வளர்ந்த ஐயப்பன், அவரை பந்தளராஜா கண்டெடுக்கும் போது அவரது தலையில் மணி மாலை இருந்ததால் மணிகண்டன் என்றே பெயர் சூட்டப்பட்டு வளர்ந்தார். பந்தள நாட்டின் இளவரசராக மணிகண்டன் வளர்ந்தபோது ராஜா ராஜசேகரனின் மனைவி கருதரித்து ஆண் மகனைப் பெற்றெடுத்தார்.
ஐயப்பனை இளவரசராக பந்தளம் ராஜா முடிசூட்ட முற்பட்டபோது, அதனைத் தடுக்க பந்தள அமைச்சர் செய்த சதித் திட்டத்திற்கு ராணியும் உடந்தையானார்.
மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதைத் தடுக்க அவரை மாய்த்துவிட சதித்திட்டம் தீட்டப்பட்டது. மகாராணிக்கு வயிற்று வலி என்றும், அதற்கு மருந்தாக காட்டில் இருந்து புலிப்பாலை கொண்டுவர வேண்டும் என்றும் சதிக்கு உடன்பட்ட அரண்மனை வைத்தியர் கூற, தாயின் நோய் தீர்க்க ஐயப்பன் காட்டிற்குப் புறப்பட்டார். பந்தள ராஜா தடுத்தும் அதனை ஏற்காத மணிகண்டன் காட்டிற்குச் சென்று பெரும் புலிக்கூட்டத்துடன் அரண்மனைக்குத் திரும்பினார்.
மணிகண்டனின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொண்ட மகாராணியும், அமைச்சரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆயினும், இளவரசராக பொறுப்பேற்க மணிகண்டன் மறுத்துவிட்டார்.
தனது பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தான் காட்டிற்குச் செல்வதாகவும், தனக்கென்று ஒரு கோயிலைக் கட்டுமாறு அரசரிடம் கூறியதாகவும், அதனை அவ்வாறே அரசரும் நிறைவேற்ற அதுவே இன்று புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலாக திகழ்கிறதென்றும் வரலாறு கூறுகிறது.
தன்னை வணங்க வருவோர் எப்படிப்பட்ட உள, உடல் நிலையுடன் வரவேண்டும் என்பதை தன்னை வளர்த்த பந்தள ராஜாவிற்கு ஐயப்பன் வலியுறுத்திச் சென்றதாகவும், அதுவே இன்றளவும் சபரி மலைக்குச் செல்லும் கோடான கோடி பக்தர்கள் கடைபிடிக்கும் விரதமாக உள்ளதென்றும் அந்த புனித வரலாறு பகர்கிறது.
பந்தளம் திருக்கோயிலிற்குச் செல்ல...
திருவனந்தபுரத்தில் இருந்து கேரளத்தின் வடபகுதிக்குச் செல்லும் தேச நெடுஞ்சாலையில் பந்தளம் அமைந்துள்ளது.
ரயில் மார்கமாக செல்வோர் செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 14 கி.மீ. சென்றால் பந்தளத்தை அடையலாம்.
விமான மார்கமாகச் செல்வோர் திருவனந்தபுரம் வந்திறங்கி 100 கி.மீ. சாலைப் பயணம் செய்து பந்தளத்தை அடையலாம்.
அச்சன்கோயில் நதிக்கரையில் அழகிய இயற்கைச் சூழலில் ஐயப்பனின் குறிப்பிடத்தக்க புனிதத் தலங்களில் ஒன்றான வலிய கோயிக்கால் ஆலயமும், அதனையொட்டி பந்தள அரண்மனையும் உள்ளது.
|