ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி சபரி மலையில் எழுந்தருளியுள்ள சுவாமி ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை மகர ஜோதி தரிசனமும் மிக மிக பிரசித்திப் பெற்றதாகும்!
சுவாமி ஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்படும்.
பந்தளத்தில் அச்சன்கோயில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோயிலிற்கு அருகில் உள்ள பந்தளராஜாவின் அரண்மனையில் இருந்து திருஆபரணம் கால்நடையாகவே சபரி மலைக்கு கொண்டு செல்லப்படும்.
மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஐயப்பன் வளர்ந்த இடமான பந்தளத்திற்கு வந்து அங்குள்ள கோயில் பிரார்த்தனை செய்ய பின்னர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துவிட்டுச் செல்வார்கள்.
இரண்டு மாத காலத்திற்கு இவ்வாறு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் திருஆபரணம், மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அதாவது 12 ஆம் தேதி வலிய கோயிக்கால் சாஸ்தா கோயிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு சபரி மலையை நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருஆபரணத்தை பந்தளராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலைமையில் கொண்டு செல்லப்படும். திருவாதிரநாள் ராகவவர்ம ராஜா அரசரின் தூதராக இருந்து திருஆபரண ஊர்வலத்தை தலைமையேற்றுச் செல்கிறார்.
பந்தளம் கோயிலில் இருந்து திருஆபரணம் ஊர்வலம் புறப்படும்போது வானத்தில் அன்று மட்டும் ஒரு கழுகு தோன்றும். திருஆபரணம் கொண்டு செல்லப்படும் ஊர்வலப் பாதையில் வானில் அக்கழுகு தொடர்ந்து பறந்து வருவது இன்று வரை நடந்துவரும் ஓர் அதிசயமாகும்.
சுவாமி ஐயப்பன் வரலாறு!
ஐயப்பனின் பிறப்பு, வளர்ப்பு குறித்து பல்வேறு புராணங்கள் இருந்தாலும், அவர் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்தவர் என்றும், குழந்தையாய் பம்பை நதிக்கரையில் விடப்பட்ட ஐயப்பனை பிள்ளைப்பேறற்ற பந்தளராஜா ராஜசேகரன் கண்டெடுத்து அரண்மனைக்கு கொண்டு வந்து தனது வாரிசாக ஏற்றுக்கொண்டார் என்பதே பொதுவாக அறியப்பட்ட ஐயப்பனின் வரலாறாக உள்ளது.
|