இச்சா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாகாளியும், கிரியா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாலட்சுமியும், ஞான சக்தியின் வடிவாக ஸ்ரீமகா சரஸ்வதியும் ஒன்றாக எழுந்தருளி அருள் புரியும் உன்னதத் தலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள திரிசக்தி பீடமாகும்!
விஜயவாடாவில் கிருஷ்ணவேணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில், ஸ்ரீகாளி மாதா அம்மாவாரி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
தல புராணம் :
ஆந்திராவின் தென்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுயம்புவானா ஸ்ரீமகா காளியின் சிலையைக் கண்ட ராணுவப் பொறியாளர் ஒருவர் அதை விஜயவாடாவிற்கு கொண்டு வந்தார். அதனை 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி குஞ்சராமசாமி என்ற அம்மனின் பக்தர் கிருஷ்ணவேணி நதிக்கரையில் வைத்து பிரதிஷ்டை செய்தார்.
அடுத்த 11 ஆண்டுகளுக்கு அவர் அங்கு சிறிய கோயிலை கட்டி அம்மனை பூஜித்து வந்தார். அதன்பிறகு அந்த கோயில் மூடப்பட்டுவிட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு 1965ல் துராக வெங்கடேஸ்வரலு என்பவர் அந்தக் கோயிலை திறந்தபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் அங்கு அம்மன் இருந்த கருவறையில் ஒளி நிரம்பிய மகாகாளியின் சக்தி இருப்பதைப் பார்த்தனர்.
அதன்பிறகு பஞ்சாமிர்த ஸ்தாபனா, ஸ்ரீ லஷ்மி கணபதி ஹோமம், லட்ச குங்கும அர்ச்சனை ஆகியவற்றை செய்து அந்தக் கோயிலில் நிரந்தரமாக பூஜை செய்து வந்தனர். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி, தீபாவளி காலங்களில் சிறப்பு உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள மகாகாளி 10 முகங்களுடனும், 10 கால்களுடனும் நீல நிறத்தில் உள்ளாள். 8 கைகளில் வாள், சாட்டை, சுதர்சன சக்கரம், வில், அம்பு, சுருக்குக் கயிறு, வெட்டப்பட்ட மனிதத் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தி உள்ளாள். இது தேவியின் தமசிக குணத்தை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
மகாகாளியே யோக நித்ரா என்றும் அழைக்கின்றனர். இவர் விஷ்ணுவை உறங்கவைத்து விட்டதாகவும், அசுரர்களான மது, காய்தபா ஆகியோரை அழிக்க உறக்கத்தில் இருந்து அவரை எழுப்புமாறு பிரம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த மகாகாளி அவரை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
|