ஏராளமான ஜைன கோயில்கள் நிறைந்துள்ள ராஜஸ்தானில் ஜைன சமயத்தினரிடையே மிகவும் புகழ்பெற்றது ஸ்ரீமஹாவீர் ஜீ கோயிலாகும்.
ஜைன மதத்தின் 24வது முனிவரான ஸ்ரீ மஹாவீராவை கெளரவப்படுத்தும் வகையில் கம்பீர் நதிக் கரையில் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
இந்த கோயிலுக்கென்று ஒரு வரலாறு உண்டு.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு பசு மாடு இருந்ததாம். அது காலையில் புறப்பட்டுச் சென்று மாலையில் அந்த இடத்திற்கு திரும்புமாம். அது திரும்பும் போது அதன் பால் மடி காலியாக இருக்குமாம்.
மேய்ந்து விட்டு வரும் பசுமாட்டின் பால் மடி வற்றி விடுவது ஏன் என்பதை அறிந்து கொள்ள அதன் உரிமையாளர் ஒரு நாள் காலை அந்த பசுவைப் பின் தொடர்ந்து சென்றாராம். அந்த பசு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றது தனது மடியில் இருந்து அனைத்துப் பாலையும் அங்கு சுரந்ததாம்.
பசு பால் சுரந்த அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கு ஸ்ரீ மஹாவீரரின் விக்ரகம் இருந்தது.
வெள்ளைப் பளிங்கு கற்களால் ஆன உயர்ந்த மேடை போன்ற அமைப்பின் மீது கட்டப்பட்டுள்ள மஹாவீர் கோயில் புராதான நவீன கால ஜைன கட்டடக்கலையின் கலப்பாகவும், புராதான ஜைன கோயில்களில் பெரும் அளவிற்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இக்கோயிலின் வடிவமைப்பு நவீன காலத்தை ஒட்டியதாக உள்ளது. பல்வேறு சிறிய கோயில்களைக் கொண்ட ஒரு பெரும் கோயிலாக இக்கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரதான கருவறையில் மிக நுட்பமாக செதுக்கப்பட்ட தூண்களின் மீது ஜைன முனிகளின் திருவுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
|