இறை சக்தி நம்மைத் துக்கப்படுத்திப் பார்ப்பதற்காக உருவாக்கவில்லை.
நம் மூலமாக அது வாழுகின்றது. நம் மூலமாக அது தன்னை பூர்த்தி செய்து கொள்கிறது. நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகின்றது.
FILE
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சில நேரத்தில் நான் பார்ப்பதுண்டு. சிலர் தாங்கள் நினைத்ததைத் தங்கள் குழந்தைகள் மூலமாகப் பூர்த்தி செய்வார்கள். சில பேருடைய குழந்தைகளும் அவர்களைப் பூர்த்தி செய்வார்கள்.
நாம் பிரபஞ்சத்தின் குழந்தைகள். பிரபஞ்சம் ஆனந்தத்தின் வெளிப்பாடு.
எல்லாமே ஆனந்தமாகத்தான் இருக்க முடியும்.
நாம் ஆனந்தமாக வாழ்ந்தோமானால், பிரபஞ்சம் நம் மூலமாக எதை அடைய வேண்டுமென்று நினைக்கிறதோ, அதை நிறைவேற்றிக் கொள்ளும். அப்போது நாம் பிரபஞ்சத்தின் இச்சையைப் பூர்த்தி செய்கின்றோம்.
அதாவது, நம்முடைய குடும்பத்தில் பார்த்தோமென்றால், அப்பா சொத்து எழுதி வைத்திருப்பார். அதேசமயம், ஏதாவதொரு கடமையையும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். "இந்த சொத்தெல்லாம் உனக்குத்தான். ஆனால், வருடத்தில் ஒரே ஒரு முறை அண்ணாமலையாருக்கு ஒரு மண்டகப்படி நடத்திவிடு" என்று எழுதியிருப்பார்.
அந்தக் கடமையைச் செய்தேமானால், சொத்தை அனுபவிப்பதற்கான தகுதி உண்டு. ஆனால், அந்தக் கடமையைச் செய்யவில்லை என்றால், சொத்தை அனுபவிப்பதற்கான தார்மீகமான தகுதி நமக்குக் கிடையாது.
இந்தப் பிரபஞ்சம், கடவுள் நமக்கு அளித்த சொத்து. அவர் நமக்கு இட்டிருக்கின்ற கட்டளை, "ஆனந்தமாக வாழுங்கள்."
"ஆனந்தமாக வாழுங்கள்" என்ற அவருடைய விருப்பத்தை "ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்" என்று அவர் கொடுத்த பொறுப்பை வாழ்வோமானால், இந்தப் பிரபஞ்சத்தை அனுபவிப்பதற்கான சுதந்திரம், தார்மீகமான உரிமை நமக்கு உண்டு.
ஆனால், அவர் சொன்ன மாதிரி "ஜீவன் முக்தர்களாக" நாம் வாழவில்லை என்றால், அவர் கொடுத்த இந்த சொத்தை அனுபவிப்பதற்கான எந்தவிதமான தார்மீக உரிமையும் நமக்கு இல்லை.