மனத்தில் தெளிவும் உறுதியும், உள்ளத்தில் இறைவனை நோக்கிய உணர்ச்சித் தூண்டுதல் இவையே யோகத்தின் முதல் இரண்டு கருவிகளாகும்; சாந்தி, தூய்மை, அமைதி (கீழ்த்தரக் கிளர்ச்சிகளை அடக்குவதுடன்) இவையே அமைக்க வேண்டிய முதல் அடிப்படை. சாதனையின் தொடக்கத்தில் இதைப் பெறுவதே அதிபெளதிக உலகங்களை அல்லது அகக் காட்சிகளைக் காணுதுல், குரல்களைக் கேட்டல், சக்திகள் பெறுதல் இவற்றைக் காட்டிலும் அதிக முக்கியமானது. தூய்மை செய்தலும், அமைதியும் யோகத்தில் முதல் தேவைகளாகும். இவையின்றி (பிற உலகங்களைக் காணல், அகக் காட்சிகள், நாதங்கள் போன்ற) ஏராளமான அனுபவங்கள் ஒருவனுக்கு இருக்கலாம்.
ஆனால், தூய்மையடையாத, கலங்கிய உணர்வில் இவ்வனுபவங்கள் ஏற்படும்போது அவை பொதுவாக கலப்பும் குழப்பமும் நிறைந்தவைகளாகவே இருக்கும்.
ஸ்ரீஅரவிந்தர்
"Peace, Calm, Quiet, Silence" ஆகிய சொற்கள் நுட்பமான பொருள் வேறுபாடு உடையன. அவைகளை விளக்குவது கடினம்.
Peace - சாந்தி Calm - அமைதி Quiet - நிம்மதி Silence -மோனம்
துருதுருப்பும் கலக்கமும் இல்லாத நிலைதான் நிம்மதி. எந்தத் தொல்லைகளும் பாதிக்காத அசையாத தெளிந்த நிலையே அமைதி. இது நிம்மதியை விட எதிர்மறைத்தன்மை குறைந்தது.
சாந்தி இன்னும் அதிக தெளிவான நிலை. அதில் நிலைபெற்ற இசைவுடன் கூடிய ஓய்வும் விடுதலையும் உணரப்படுகிறது.
மோனத்தில் மன, பிராண இயக்கங்களே இரா. அல்லது மேற்பரப்பிலுள்ள எந்த இயக்கமும் உள்ளே செல்லவோ மாற்றவோ முடியாது. பெரும் நிசப்தமாயிருக்கும்.
**
நிம்மதியை இழந்துவிடாதே; சிறிது காலத்திற்கு அது வெற்று நிம்மதியாயிருந்தாலும் பரவாயில்லை. உணர்வு ஒரு பாத்திரம் போன்றது. அதிலுள்ள கலப்புகளை அல்லது வேண்டாத பொருட்களை அடிக்கடி காலி பண்ண வேண்டும். அதைப் புதிய, உண்மையான, சரியான, தூய பண்டங்களால் நிரப்புமுன் சிறிது காலம் காலியாக வைத்திருப்பது அவசியம். கவனமாயிருக்க வேண்டிய ஒரே விஷயம்: பாத்திரத்தை மீண்டும் பழைய மண்டியால் நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், பொறுமையோடிருந்து உன்னை மேல்நோக்கித் திற; அமைதியைக் கெடுக்கக் கூடிய அதிக ஆவல் இல்லாமல், மோனத்தினுள் சாந்தி வருவதற்கு, நிம்மதியாக, நிலையாக அழை; சாந்தி வந்து நிலைத்தபின் ஆனந்தத்தையும் தெய்வ சாந்நித்யத்தையும் அழை.
**
|