அன்னையின் பதில்:
அதை அறிவதில்லை, உணர்கிறோம். அவ்வாறு உணர வேண்டுமானால் எல்லாத் தடைகளும் மறைந்து போகும் அளவுக்கு அவ்வளவு தீவிரமாக, அவ்வளவு நேர்மையுடன் சங்கற்பிக்க வேண்டும். உன்னிடம் விருப்பு வெருப்பு, ஆசை, ஒரு கவர்ச்சி இவையெல்லாம் இருந்தால் அவை உனக்கும் உண்மைக்கும் இடையே திரையாக அமைந்து விடுகின்றன. ஆகவே, உன்னுடைய முதல் வேலை உன்னுடைய உணர்வின் இயக்கங்களையெல்லாம் ஆளவும், கட்டுப்படுத்தவும், திருத்தவும், அவ்வாறு மாற்ற முடியாதவைகளை களைந்துவிடவும் நீ முயல வேண்டும். முடிவில் எல்லாம் உண்மையின் பூரணமான, நிரந்தரமான வெளிப்பாடாக ஆகிவிட வேண்டும்.
இவ்வாறு ஆக வேண்டும் என்று ஒரு தரம் சங்கற்பித்தால் மட்டும் போதாது, ஏனெனில் நீ அடிக்கடி அவ்வாறு சங்கற்பிக்கத் தவறிவிடுவாய்.
இடைவிடாத நெருப்பைப் போல ஜீவனில் எரிந்து கொண்டிருக்கும் ஆர்வம் வேண்டும், உன்னிடம் ஒரு விருப்பு, ஓர் ஆசை, ஒரு கவர்ச்சி தோன்றும் ஒவ்வொரு தடவையும் அதை இந்த நெருப்பில் எறிய வேண்டும். இதை நீ விடாது செய்து வந்தால் உன்னுடைய சாதாரண உணர்வில் மெய்யுணர்வின் ஒரு மெல்லிய ஒளிக்கற்றை பாயத் தொடங்குவதை காண்பாய். முதலில் அது மங்கலாகவும் விருப்புகள், ஆசைகள், கவர்ச்சிகள் ஆகியவற்றின் இரைச்சல்களுக்குப் பின்னால் வெகு தொலைவிலும் இருக்கும். நீ இவற்றிற்கெல்லாம் பின்னால் சென்று பூரண அமைதியுடன், அநேகமாக மோனமாகவே இருக்கும் அந்த உண்மையான உணர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்.
உண்மையான உணர்வுடன் தொடர்பு கொண்டிருப்பவர்கள் எல்லா வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். தேவையானால் வேண்டுமென்றே எல்லாவற்றிலும் அதிகக் கடினமானவற்றை அவர்கள் தேர்ந்தெடுக்கவும் கூடும். ஆனால் இந்தக் கட்டத்தை அடைய நீ இன்னும் நெடுஞ்தொலைவு செல்ல வேண்டும்.
விருப்புகளை குணமழியச் செய்ய வேண்டுமா அல்லது மறந்துவிட வேண்டுமா?
விருப்புகளே இருக்கக் கூடாது!
மனம் மோனமுற்றபோது, அது எல்லாவற்றையும் பற்றித் தீர்ப்புக் கூறுவதையும், தான் ஞானம் என்று கருதுவதை வைத்துக் கொண்டு முந்திரிக்கொட்டை போல் முந்திக் கொள்வதையும் விட்டுவிடும்போது, ஒருவன் வாழ்க்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தொடங்குகிறான். நாம் தீர்ப்புக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் மனம் செயலுக்கான கருவியே அன்றி ஞானத்திற்கான கருவி அன்று. உண்மையான ஞானம் வேறு இடத்திலிருந்து வருகிறது.
ஒருவன் தீர்ப்புக் கூறுவதைத் தவிர்த்தானேயானால், உண்மையைப் பற்றி மேன்மேலும் துல்லியமான ஞானத்தைப் பெறுவான், உலகின் துயரங்களில் பத்துக்கு ஒன்பது மறைந்துவிடும்.
மனம் தனக்கு உண்மையான ஞானம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளுமானால் உலகிலுள்ள பெருங்குழப்பம் பெருமளவு குணமழிந்துவிடும்.
|