இரண்டாவது, ஆன்மீக உருமாற்றம் அல்லது ஆன்மீகமயமாதல் இதற்கு ஆன்மீக சித்தி அவசியமாகிறது. நமது தலைக்குமேல் ஒருமுனைப்பட்டு, உடல் உணர்வாகிய சிறையிலிருந்து விடுபட்டு, என்றுமாய், ஏகமாய், முக்தனாய், அமரனாய், ஒன்றேயாய் உள்ள ஆத்மனை அறிதல் இதற்கு அடிப்படை. அந்த ஆன்மாவின் தன்மைகளாவன : எல்லையற்ற ஒளி, எங்கும் பரவி நிற்கும் அமைதி, தூய்மை, ஞானம், சக்தி இவைகள். இந்த சித்தி அடைந்த பின், நமது இயற்கையையும் (சுபாவத்தை) ஆன்மீகமயமாக்கும் வேலையைச் செய்ய வேண்டும். நமது உணர்ச்சிகள் படைப்புகள், செயல்களை எல்லாம் நமது மனம், பிராணன் உடல் முழுவதையும் இந்த எல்லையற்ற ஒளி, அமைதி, ஞானம், தூய்மை, சக்தி இவைகளால் நிரப்பி இவைகளையே வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும்.
இந்த இரண்டு சித்திகளையும் அடைந்த பிறகே அதிமன உணர்வு என்ற மிக உயரிய பொன்னொளி வீசும். அந்த சக்தி வாய்ந்த, உண்மை உணர்வுள் நம்முள் இறங்கி, நிலை கொண்டு செயல்பட முடியும். இருள், அஞ்ஞானம், குறைபாடு என்பவை சிறிதுமில்லாத அந்த அநந்தமான திவ்ய உணர்வு செயல்படும்போது, நாம் எப்போதும் இறைவனின் சாந்நித்யத்திலும், சாமீப்யத்திலும், சாலோக்யத்திலும் இருப்பதை என்றுமாய். நித்யமாய் அநுபவித்து, ஆனந்திப்பதோடல்லாமல், நமது செயல்களெல்லாமும், வாழ்வனைத்தும் சர்வவல்லமை கொண்ட இறைவனின் வெளிப்பாடாக விளங்கி, உலகிடை ஓர் பொன்னொளி ஞாயிறு போல் நிலவுவோம்.
மொழிபெயர்ப்பு :- ச. மகாலிங்கம்.
நன்றி : வைகறைஸ்ரீ அரவிந்த ஆசிரம காலாண்டு வெளியீடு.
|