உன்னிலும் உன்னைச் சுற்றிலும் உள்ள கீழியற்கை சுத்தியை நடக்க விடாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளும், சுத்தியை நிறுத்திவிட முடியாத போதும், தாமதப்படுத்தவாவது முயலும்.
அதனுடைய மிகப் பலமான ஆயுதம் இதுதான். சுத்தி வேலை முடிந்து விட்டது என்று நீ நினைத்துக் கொண்டிருக்கும்போது திடீரென உன்மீது படையெடுத்து, நீ இன்னும் சுத்தியில் வெற்றியடைந்து விடவில்லை, அது இன்னும் எவ்வளவோ தொலைவில் உள்ளது என்று உன்னை நம்பவைத்து, அதன் மூலம் உன்னிடம் ஏமாற்றம், கவலை, நம்பிக்கையின்மை, அதைரியம், சோர்வு, எதிர்ப்பு முதலிய தொல்லைகளை எழுப்பும்.
நீ அமைதி, உறுதியான நம்பிக்கை, சமதை இவற்றைப் பெற்று, சிறிது காலமாவது அந்நிலையில் வசித்த பிறகுதான், அப்போதுமட்டுந்தான், சுத்தி உன்னிடம் இடங்கொண்டு விட்டது என நீ நிச்சயமாக இருக்கலாம். அப்பொழுதும் அது கெடாது, கலங்காது என்று நீ நினைத்துவிடக் கூடாது. உன்னுடைய இதயமும் பிராணமும் பழைய இயக்கங்களுக்குப் பதிலளிக்கும் வரை, பழைய நினைவுகளை இன்னும் வைத்திருக்கும் வரைக்கும் பழைய தாளத்திற்கு ஆடும் வழக்கம் இருக்கும் வரை, சுத்தி நிலைகுலையே செய்யும்.
கீழியல்பு மீண்டும் தொல்லை கொடுத்தால் செய்ய வேண்டியது இதுதான்: உனது மனத்திலும் இச்சா சக்தியிலும் அதிலிருந்து விலகி நின்று, உனது கீழ் இயற்கையில் அது கொந்தளித்துக் கொண்டிருக்கும்போதும் உனது உயர் ஜீவனின் அனுமதியைக் கொடுக்க மறுத்துவிட வேண்டும்.
மறுக்கும் வழக்கம் நெருக்கத் தொடங்கியதும்- தொடக்கத்தில் இதில் வெற்றி கிடைக்காது, ஏனெனில், புயல் புத்தியை அடித்துக் கொண்டு போய்விடும்- அசுத்தியானது இன்னும் வந்தபோதிலும் அதன் உக்கிரம் குறைந்துவிடும், வரவர உள்ளே ஆழமாகப் போகாமல் மேலெழுந்தவாரியாகவே வரும், பிறகு இலேசாக, அதிக நேரம் நீடிக்காமல், தொட்டுவிட்டுப் போகும், முடிவில் வரவே வராது.
இவ்வாறு இப்பாதையின் முன்னோடிகள் கீழ்ப் பிரகிருதியாகிய காட்டினூடே வெட்டித்தறித்துப் பாதை உண்டாக்க வேண்டியதிருக்கிறது.
இவ்வாறே குருநாதனுடைய ஆன்மிகப் பாரத்தைப் பங்குபோட்டுக் கொள்ளத் துணிகின்றவர்களும், எந்த அளவிலாவது பிறருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லுவதற்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவர்கள் கோழைகளாகவும், பாரத்தைத் தாங்க விரும்பாமல் தட்டிக் கழிப்பவர்களாகவும், சிரமமில்லாமலும் விரைவாகவும் இலட்சித்தை அடைந்துவிட நினைப்பவர்களாகவும் இருக்கக் கூடாது.
குருநாதன் கேட்பது பலவான்களை, உணர்ச்சி வசப்படும் குழந்தைகளை அல்ல.
குருநாதன் கேட்பது தாங்கும் சக்தி, உறுதி, வீரம்- உண்மையான ஆன்ம வீரம். அவர் கேட்பது ஆண்மை, அதன் மேல் தெய்விக ஆண்மையும்தான்.
மொ.பெ. : ச. மகாலிங்கம்
வைகறை
ஸ்ரீ அரவிந்த ஆசிரம காலாண்டு வெளியீடு, புதுவை
|