நமது யோகத்தின் நோக்கம்
நமது யோகத்தின் நோக்கம் நம்மைப் பூரணப்படுத்திக்கொள்வதே, இல்லாது செய்துகொள்வதன்று. யோகியின் முன் இரு பாதைகள் உள்ளன. ஒன்று பிரபஞ்சத்திலிருது பறந்து போய்விடுதல், மற்றொன்று பிரபஞ்சத்திலேயே பூரண நிலையை எய்துதல். முதல் வழி துறவு வழி, இரண்டாவது வழி தவத்தினால் வருவது. நாம் நமது இருக்கையை (existence) கடவுளில் மூழ்கடித்துவிடும்போது முதல் வழி நம்மை வர்வேற்கும நாம் நமது இருக்கையை இறைவனில் நிறைவேற்றும்போது இரண்டாவது வழியை அடைகிறோம். எல்லா போர்களிலிருந்தும் தப்பிவிடுவதென்று, போரிட்டு வெற்றியடைவதே நமது இலட்சியமாக இருக்க வேண்டும்.
முதலாவது உணர்வை இறைவனுக்குத் திறந்து மென்மேலும் உள் உணர்வில் வாழ்ந்து அதிலிருந்து புற வாழ்வின் மீது செயல்படுதல், மிக ஆழத்திலுள்ள சைத்திய புருஷனை முன்னுக்குக் கொண்டு வருதல், சைத்திய புருஷனின் சக்தியால் இயற்கையைத் தூய்மைப்படுத்தி, மாற்றி, உருமாற்றத்திற்குத் தயாராக்குதல், தெய்வீக ஞானத்துடன், இச்சா சக்தியுடன், அன்புடன் ஐக்கியமடைதல்.
இரண்டாவதாக, யோக உணர்வை வளர்த்தல், அதாவது ஜீவனை அதன் எல்லாத் தளங்களிலும் விஸ்வமயமாக்குதல், விஸ்வ புருஷனையும் விஸ்வ சக்திகளையும் உணர்ந்து கொள்ளுதல், மேல்மனம் (overmind) வரை உள்ள எல்லா உணர்வுத் தளங்களிலும் இறைவனுடன் ஒன்றுபடுதல்.
மூன்றவதாக அதிமன உணர்வின் மூலம் மேல் மனத்திற்கும் அப்பால், படைப்பிற்கு மேலே உள்ள இறைவனுடன் தொடர்புகொள்ளுதல், உணர்வையும் இயற்கையையும் அதிமன மாற்றமடையச் செய்தல், படைப்பாற்றல் கொண்ட இறை உண்மை சித்திபெறவும், புவி இயற்கையில் இறங்கி உருமாற்றஞ்செய்யவும் தன்னைக் கருவியாக்கிக்கொள்ளுதல் - இதுவே பூரண யோகத்தின் நோக்கம்.
.....இதுவே ஸ்ரீ அரவிந்தரின் சித்தாந்தமும் சாதனை முறையும் ஆகும். எந்த ஒரு சமயத்தை வளர்ப்பதோ, பழைய சமயங்களையெல்லாம் ஒன்றாக இணைப்பதோ, புதியதொரு சமயத்தைத் தோற்றுவிப்பதோ ஸ்ரீ அரவிந்தரின் நோக்கமன்று. ஏனெனில் இவற்றில் எதைச் செய்தாலும் அது அவரது மையமான நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாகும். அவருடைய யோகத்தின் ஒரு நோக்கம் அதைப் பின்பற்றுவோர் அக வளர்ச்சியின் மூலம் எல்லாவற்றிலும் ஒன்றாகவுள்ள ஏகாத்மாவைக் கண்டு, மன உணர்வுக்கு மேலே உள்ள உணர்வை, ஓர் ஆன்மீக, அதிமன உணர்வை வளர்த்து அதன்மூலம் மனித இயற்கையை உருவமாற்றி அதைத் தெய்வத்தன்மை பெறச் செய்வதே ஆகும்.
மொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்
மனித இனம் முழுவதையும் அதிமனமாற்றமடையச் செய்வது தற்போதைய உடனடி நோக்கமன்று. உலகப் பரிணாமத்தில் அதிமன உணர்வு என்னும் தத்துவத்தை நிலைநாட்டுவதே நோக்கம். இதைச் செய்துவிட்டால் தேவையானவற்றையெல்லாம் அதிமன சக்தியே படைத்துக்கொள்ளும். ஆகேவ நமது பணி பரவ வேண்டும் என்பது இப்போது முக்கியமல்ல. ஒரு சிலர் விஷயத்திலாவது இந்த உருமாற்றம் நிறைவேற வேண்டும், அதுவே முக்கியமானது.
- ஸ்ரீ அரவிந்தர்
|