(ஸ்ரீ அரவிந்தரின் The Life Divine என்ற நூலிலிருந்து)
வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.
நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.
இயற்கையைத் திருவுருமாற்றம் (transformation) செய்து தெய்வீக வாழ்க்கை வாழ்வதற்கு முதல் தேவை நம்முள்ளே உற்று நோக்கி, உள் உண்மைகளைக் கண்டு, உள்ளே ஆழ்ந்து சென்று அந்த ஆழத்தில் வாழ்வதே ஆகும்.
வாழ்வுப் பிரச்சனைக்கு ஆன்மீகம் கூறும் விடை புறச்சாதனங்களால் தீர்வு காண்பதல்ல. புறச்சாதனங்களையும் பயன்படுத்தலாம், ஆனால் உண்மையான தீர்வு உணர்வும் இயல்பும் ஓர் அகமாற்றம், ஒரு திருவுருமாற்றம் அடைவதன் மூலமே கிடைக்கும்.
நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.
"எல்லா அறங்களையும் விதிகளையும் செயல்களையும் துறந்துவிட்டு என்னை மட்டுமே சரணடை", இதையே ஆர்வங்கொண்ட மனிதனுக்கு மிக உயரிய ஆன்மீக நிலையில் வாழ்வதற்கான மிக உயர்ந்த விதியாகக் கடவுள் காட்டுகிறான்.
|