சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டமான செங்கல்பேட்டை அடுத்த பழைய சீவரத்தில் உள்ள ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில் கீர்த்திமிக்கதாக பக்தர்களிடையே போற்றப்படும் கோயில்களின் ஒன்று.
மும்மூர்த்திகள் உருவில் காட்சி :
செய்யாறு, பாலாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் ஆற்றங்கரையையொட்டியே இந்த ஆலயம் கம்பீரமாக அமைந்துள்ளது. திருமுக்கூடலில் எழுந்தருளும் வெங்கடேச பெருமாள், மும்மூர்த்திகளின் உருவாக காட்சி தருவது இந்த தலத்தின் சிறப்பம்சமாகும்.
கையில் சங்கு, சக்கரம் இருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், திருவடியிலும் தாமரை புஷ்பம் இருப்பதால் பிரம்மரூபமாகவும் வெங்கடேச பெருமாள் சேவை சாதிக்கிறார்.
தனிக் கோயில்கள் :
பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். நாச்சியார், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு தனிக்கோயில்கள் உண்டு. மேலும் தாயார் அலமேலு மங்கை, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் இங்கு உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் வரலாற்று சிறப்புக்கும் உரியதாகும். முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை என்று தண்டன் தோட்டம் பட்டயம் கூறும் நந்திவர்ம பல்லவன் ஆண்ட காஞ்சியின் கிழக்கு திசையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகே இரு குன்றுகளுக்கு இடையே பாய்ந்தோடும் நதி, முப்புறமும் பச்சைப்பசேல் என திகழும் வயல்வெளிகள் என உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ள இயற்கை எழில் எல்லோரையும் மயங்க வைப்பதாகும்.
சீனிவாச பெருமாள் :
தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.
அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
|