முதன்மை பக்கம்  ஆன்மிகம்  ஆன்மிகம்  தலங்கள்
 
தொண்டை மன்னனுக்குக் காட்சி கொடுத்த திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர்!
Webdunia

வடதிருமுல்லைவாயில் திருக்கோயில் மிகப் பழமையானது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகம் பெற்ற திருத்தலம். 10-ம் நூற்றாண்டு முதல் 15 -ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இத்தலத்து இறைவன் புகழை அருணகிரிநாதர், மாதவச் சிவஞான யோகிகள், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், இரட்டைப் புலவர் முதலியோர் பாடியுள்ளனர். இத்தலத்தைப் பற்றி புலவர் மயிலை சண்முகம் பிள்ளை புராண காவியம் இயற்றியுள்ளார்.

வட திருமுல்லைவாயிற் புராணம் இவர் பாடிய நூல்களுள் பெரியது. இது தவிர இவர் பாடியளித்த சிற்றிலக்கியங்கள் சிலவும் உள்ளன. வடதிருமுல்லைவாயிற் புராணம் 23 படலங்களைக் கொண்டது. இதில் 1,458 பாடல்கள் உள்ளன.

"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் வணங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" எனத் தாயுமானவர் கூறியாங்கு 3 முதல் 5 வரையுள்ள படலங்கள் தலவிசேடம். தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம் பற்றி எடுத்துரைக்கின்றன.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த தொண்டமான் வழிபடு படலமும் இந்த பாடலில் உள்ளது. திருமுல்லைவாயில் பெருமானின் லிங்கத் திருமேனியைக் கண்டவன் இந்த தொண்டைமான். பெருமானுக்கு முதலில் திருக்கோயில் அமைத்தவன். கருவறை, மகா மண்டபம், பட்டி மண்டபம், நிருத்த மண்டபம், அலங்கார மண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றை அமைத்தான். நித்திய பூசைகளும், விழாக்களும் தவறாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவன் தொண்டை மன்னன்.

இம்மன்னன் வழிபட்டதைச் சுந்தரமூர்த்தி நாயனார் தனது பாடலில்,

"சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே"

என்று குறிப்பிடுகிறார்.

நைமிசப் படலம்

நைமிசக் காடு இமயமலைச் சாரலில் உள்ளது. இது, முனிவர்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடமாகும். இக்காடு புராணங்களின் பிறப்பிடமாய் இருந்தது.

ஒரு காலத்தில், முனிவர்கள் பிரம்மதேவனிடம் சென்று "உலகத்தில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் யாது?" என்று வினவினர். அப்பொழுது பிரமதேவன், ஒரு தருப்பைப் புல்லைச் சக்கரமாக அமைத்து, அதனை உலகில் உருட்டி, "இச்சக்கரத்தின் பின் நீங்கள் செல்லுங்கள்; அது எங்குப் போய் நிற்கிறதோ, அந்த இடமே தவம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்" என்றார். பிரமன் விடுத்த அந்தச் சக்கரம் நைமிசக் காட்டில் வந்து நின்றது. சக்கரத்தை "நேமி" என்று வடமொழியில் கூறுவர். எனவே, இந்தக் காடு "நைமிசக் காடு" எனப்பட்டது. இக்காடு, இமயமலைச் சாரலில் இருப்பதோடு, கங்கை நதிக் கரையிலும் அமைந்துள்ளது.

நைமிசக் காட்டில் வாழ்ந்த முனிவர்களுள் சூதமாமுனிவர் தலைசிறந்தவர். அவரே புராணங்கள் பலவற்றையும், முனிவர்களுக்கு அருளிச் செய்தவராவார். திருமுல்லைவாயில் புராணத்தை அருளிச் செய்தவரும் அவரேயாவார். நைமிசக் காட்டில் அமர்ந்து தவம் செய்வோரை இது சிவபெருமானிடம் கொண்டு செலுத்தும் ஆற்றல் உடையது.

அவர்களுடைய பிறவியைப் போக்கவல்லது; சைவ நெறியை நிலைநிறுத்த வல்லது; அன்பினால் நெஞ்சத்தை உருக்க வல்லது; ஆணவம், கன்மம், மாயைகளை முழுமையாய் நீக்க வல்லது. காமம் முதலிய குற்றங்களைக் கருகச் செய்ய வல்லது; மற்றும் இதன் புகழைக் கேட்பவர்ளை உயர்த்தவல்லது. இக்காடு வளம் செறிந்திருந்தது. இதில் வாழ்ந்த விலங்குகளும் பகைமை மறந்து வாழ்ந்தன.

நைமிசக் காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் திருநீறையும் கண்டிகையையும் (உருத்திராக்கம்) அணிந்து பொலிவோடு விளங்கினர். அவர்கள் சிவபெருமானைத் தவிர வேறு தெய்வங்களை வணங்காதவராய் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கண்ணுவர், சதாநந்தர், முற்கலர், விபாண்டகர், உக்கிர சீலர், போதாயனர், கபிலர், சௌனகர் ஆவர்.

இம்முனிவர்களைக் காண்பதற்கு ஒரு முறை சூதமா முனிவர் வந்தார். அவர் வியாசரிடம் பதினென் புராணங்களைக் கேட்டுணர்ந்தனர். அவர் திருமேனியில் சிவ சாதனங்கள் பொலிந்தன. கையில் கமண்டலமும் யோக தண்டமும் விளங்கின. அவருடைய நா, திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டிருந்தது.

நைமிசக் காட்டு முனிவர்கள் சூதமா முனிவரை எதிர்கொண்டு வரவேற்றுப் பல உபசாரங்களைச் செய்தனர். பிறகு ஒரு வேண்டுகோளையும் அவர் முன் வைத்தனர். "தவமே உருவான முனிவரே! முன்பு சிவபெருமானைக் குறித்த பல புராணங்களை எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீர். கயிலை, காசி, காஞ்சி, சிதம்பரம், திருக்கழுக்குன்றம் போன்ற பல புராணங்களை எடுத்துரைத்தீர். அத்தகு சிறப்புடைய வேறொரு தலத்தின் பெருமையை இன்று எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுகிறோம்" என்றனர்.

அவ்வேண்டுகோளைக் கேட்ட சூதமா முனிவர் சிவபெருமான் திருவடிகளை நினைத்துக் கொண்டு வடதிருமுல்லைவாயில் புராணத்தைச் சொல்லத் தொடங்கினார். "முனிவர்களே! வட திருமுல்லைவாயில் என்று ஒரு தலம் உள்ளது. அதன் புராணச் சிறப்புகளை யான் அறிந்த வகையில் உங்களுக்குச் சொல்கிறேன். வடதிருமுல்லைவாயில் ஒரு சிறந்த தலமாகும். அது மும்மலத்தை ஒழிக்க வல்லது. அத்தலத்தின் பெயரை நாவினால் ஓதுவோர் யாவராயினும் சிவபெருமானைச் சென்றடைவர். அத்தலத்தில் தங்குவோர் பல பேறுகளைப் பெறுவர்.

தவசிகள் தாம் செய்கின்ற வேள்விகளின் பயனைப் பெறுவர். தவறு செய்பவர்கள் தம் வினைகள் நீங்கப் பெறுவர். இத்தலச் சிறப்புகளைக் கேட்பவர்கள் துன்பங்களிலிருந்து நீங்குவர். சூரியன் முதலிய ஒன்பது கோள்களும் அவர்களுக்கு இசைவாக அமைந்து, வேண்டியவற்றை வேண்டியவாறே அளிக்கும்.

புராண வரலாற்றுப் படலம்

கயிலைமலை தூய்மைக்கு இருப்பிடமானது; மணியில் ஒளிபோலப் பிரகாசம் உடையது. அது சிவபெருமானின் திருவுருவைப் போலக் காட்சி தருவது. அதாவது அதன் உச்சியில் கங்கைநீர் பாய்கிறது. அதனருகில் வானத்தின் வெண்பிறை தவழுகிறது. அடிவாரத்தில் மான் கூட்டங்கள் உள்ளன. அந்த மலையில் சிவபெருமான் அம்பிகையோடு என்றும் இனிது வீற்றிருக்கிறார்.

ஒரு சமயம் அப்பனை நோக்கி அம்பிகை, "மகாதேவா! இவ்வுலகம் நீரில் மூழ்கிப் போகின்ற பிரளயகாலத்தில் அழியாமல் நிற்கக் கூடிய ஓரிடத்தைக் கூறுக" என்று கூறினார்.

இறைவன் அதற்குப் பின்வருமாறு விடையளித்தார் : "ஊழிக்காலத்தில் அழியாமல் இருப்பதும், எனக்கு மகிழ்ச்சி தருவதும் ஆகிய தலம் ஒன்று உள்ளது. அது ஸ்ரீசைலம், சிதம்பரம், திருமறைக்காடு, திருஒற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர், காசி, கோகர்ணம், மயிலாடுதுறை, வெள்ளிமலை, திருக்கழுக்குன்றம், பழமலை, திருவண்ணாமலை, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, சீர்காழி, திருச்சாய்க்காடு, திருவையாறு, சீதளபுரம், சடானனம், குடந்தை, சூரியனார் கோயில் முதலியவற்றை விடச் சிறந்தது. அத்தலம் பிரளயத்தின் போது அசையாமல் இருப்பதனால் அதற்கு "ஸ்திரநகர்" என்று பெயர் வந்தது. அதனைச் "சித்திகேந்திரம்" என்றும் அழைப்பர்.

அத்தலத்தில் தங்கி வாழ்பவர்களுக்கு அது மனக் கிளர்ச்சியையும் மங்கலத்தையும் தருவதனால் அதற்குக் "கல்யாணமாபுரம்" என்றும் பெயர் உண்டு. கிருத யுகத்தில் பிருகு முனிவருக்கு இரத்தினங்களைக் கொடுத்ததனால் அந்நகர் "அரதனபுரம்" ஆயிற்று திரேதாயுகத்தில் அதற்குக் "கூவிளத் (வில்வத்) திருமலிவனம்" என்று பெயர். துவாபர யுகத்தில் "சண்பக வனம்" எனப் பெற்றது. இக்கலியுகத்தில் "திருமுல்லைவாயில்" (மாலதி வனம்) என வழங்கப்படுகிறது.

அத்தலத்தில் இறப்போர் எம் உருவத்தை (சாரூபத்தை) எளிதில் பெறுவர். இது அத்தலத்திற்குரிய தனிச்சிறப்பாகும். மற்றும் முருகனும், வசிட்டரும் பிறரும் அங்கு வந்து வழிபடுவர்" என்றார்.

இவ்வாறு கூறிய சிவபெருமானிடம் நந்தி தேவரும், வானவர்களும், முனிவர்களும், மகிழ்ச்சி மிக்கவராய் இறைவனிடம் வந்து திரண்டனர். பெருமானும், கயிலை மலையை விட்டு, அம்பிகையோடு மற்றவரும் புடைசூழ நந்தி தேவர் மீதமர்ந்து திருமுல்லைவாயில் நகரை வந்தடைந்தார்.

"கந்தன் இத்தலத்தை வழிபடும்போது தெளிந்த நீரைக்கொண்ட பொய்கை ஒன்றை உண்டாக்குவேன். பின்னர், இந்திரன் அப்பொய்கையைப் புதுப்பிப்பான். அது மங்கலவாவி என்று வழங்கப் பெறும்" என்று எம்பெருமான் கூறினார்.

"பிரதோஷ காலத்தில் அன்புடன் வந்து தரிசிப்பவர் நம்மை வந்து அடையும் தகுதி பெறுவர். மற்றும் சனிப் பிரதோஷத்தில் ஆயிரம் முல்லை மலர் கொண்டு அருச்சித்து வழிபடுவோர் எமது உருவம் பெற்று, உலகோரால் போற்றப் பெறுவர்"என்று கூறிய பின், எம்பெருமான் விடையிலிருந்து இறங்கி, "உமையே! இங்கே இருக்கின்ற லிங்கத்தில் நாம் மறைந்திருப்போம்; நீயும் எம்முடன் உறைவாயாக!" என்றார்.

அப்போது உமையானவள், "மாமணியே! நான் ஒரு வரம் பெற விரும்புகிறேன். அருள்புரிக! இந்நகரத்தில் தங்கி பக்தியோடு வழிபடுவோர்க்கு உம் திருவடிப் பேற்றை அருள வேண்டும். இதுவே என் விண்ணப்பம்" என்றார். எம்பிரானும் அதற்கு "அவ்வாறே ஆகுக!" என்று கூறினார். பிறகு இருவரும் லிங்கத்தில் மறைந்தருளினர்.

இவ்வாறு லிங்கத்தில் மறைந்த நாள் வைகாசி மாதம், பௌர்ணமி, கடக ராசி, விசாக நன்னாளாகும். (இந்நாளில் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது) இவ்வாறு சூதமா முனிவர், மற்ற முனிவர்களுக்கு தான் வியாசரிடம் கேட்டறிந்தவற்றைக் கூறினார்.

தல விசேடப் படலம்

சூதமா முனிவர் மேலும் சொன்னார் : "சிவபெருமான் பெருமையைப் பேசும் புராணங்கள் பத்து. அவை:-

1. கந்த புராணம்
2. வாமன புராணம்
3. மச்ச புராணம்
4. வராக புராணம்
5. மார்க்கண்ட புராணம்
6. லிங்க புராணம்
7. பௌடிக புராணம்
8. பிரம்மாண்ட புராணம்
9. சைவ புராணம்
10. கூர்ம புராணம் ஆகியன.

இவற்றுள் பௌடிக புராணத்தின் சிவகேந்திர காண்டத்தில் மார்க்கண்ட சங்கிதையின் நடுவில் திருமுல்லைவாயிலின் பெருமை பேசப்படுகிறது. அதில் தெரிவித்துள்ளவற்றை சூதமா முனிவர், மற்ற முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

தீர்த்த விசேடப் படலம்

வடதிருமுல்லைவாயில் திருக்கோயிலின் கீழ்த்திசையில் முதன்மையான ஒரு தீர்த்தம் உள்ளது. அதற்கு "மானத தீர்த்தம்", "குகனருந்தடம்", "அயிராவத தீர்த்தம்", "இஷ்டசித்தி தீர்த்தம்", "மங்கல தீர்த்தம்", "அரதனத் தடம்", "சிவஞான தீர்த்தம்", "பிரம தீர்த்தம்" என்று பல பெயர்கள் உள்ளன.

இத்தீர்த்தத்தில் வைகாசி பௌர்ணமி மற்றும் மாசி மகத்தில் வெள்ளிக்கிழமைகளிலும், மாசி மாத திங்கட்கிழமைகளிலும் நீராடி இறைவனை வழிபடுவோர், உலக நலங்கள் பலவற்றையும் பெறுவர்.

மகா சிவராத்திரி, மாத சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், சித்திரைப் பௌர்ணமி முதலிய புண்ணிய தினங்களில் நீராடினால் இக, பர சுகங்கள் இரண்டையும் பெறுவர்.
1| 2| 3
மேலும்
அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில் - திருக்கருகாவூர்
திருக்கரம்பனூர் - உத்தமர் கோயில்
திருக் கோழி (உறையூர், நிகளாபுரி)
திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்
ஆறாவதுபடை வீடு : பழமுதிர்ச்சோலை
ஐந்தாவதுபடை வீடு : திருத்தணிகை