பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் 108 வைணவத் தலங்களில் மகத்துவம் மிக்க புண்ணியஸ்தலமான திருப்பதி திருமலை கோயில் உருவானது பற்றியும், எம்பெருமான் ஏழுமலையான் பற்றியும் விரிவான தகவல்களுடன் நூல் ஆசிரியர் சந்திரசேகர சர்மாவின் படைப்பாக வரம் பப்ளிகேஷன்ஸின் வெளியீடாக வந்துள்ள நூல் சுடர் விடும் சூப்பர்ஸ்டார்.
இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் திருப்பதி திருமலை பற்றிய முன்னுரையுடன் சுப்ரபாதம் பாடலை 'வேங்கடவா எழுந்தருள்வாய்' என அழகு தமிழில் பாடும் விதமாக கொடுத்துள்ளனர்.
திருப்பதி திருமலை தோன்றிய புராணக்கதையை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லிய விதம் சிறப்பு.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைப்பயணமாக மலையேறும் பக்தர்கள் எப்படி செல்ல வேண்டும், நடைப்பாதையில் பக்தர்களுக்கு உள்ள வசதிகள், நடைப்பயணம் தொடங்கும் முன் நீராட வேண்டிய தீர்த்தம், பிறகு வழிபட வேண்டிய பகவான், செல்லும் வழியில் தரிசிக்க வேண்டியவை, மண்டபம், கோபுரம், ஆலயம் என ஒவ்வொன்றையும் அடைந்து மேலேறி வந்தால் கோயில்... என நாம் படிக்கும்போதே நம் கண் முன் ஜொலிக்கிறது திருமலை.
அதன் பிறகு பாவங்கள் போக்கும் புண்ணிய தீர்த்தங்கள், தீர்த்தங்களில் நீராடும் முறை, தீர்த்தங்களின் வகைகள் பற்றியும் விரிவாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.
திருமலையில் அடிவைத்ததும் வெள்ளி வாசல் வழியே நுழைந்தால் விமான பிரதட்சிணம், தங்கக் கிணறு, தங்க விமான தரிசனம் என ஒவ்வொன்றையும் கடந்து வந்தால் ஏழுமலையான் சந்நதிக்குள் நுழையுமுன் கடந்து செல்ல வேண்டிய மூன்று அரங்கங்கள், அதன் பிறகு நமக்கு கிடைக்கும் ஏழுமலையான் தரிசனத்தை நாம் படிக்கும்போதே பெற்று விடுகிறோம்.
|