மண்டலப் பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்ட சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயிற்கு வரும் பக்தர்களை முறைபடுத்த புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளது திருவிதாங்கூர் தேவஸ்தானம்.
புனித பம்பா நதியில் நீராடிவிட்டு இருமுடியுடன் மலையேறத் துவங்கும் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை நேர்ந்தால், அவர்களை வெயில், மழை ஆகியவற்றிலிருந்து காக்க, பம்பை நதியோரத்தில் - பாலத்திலிருந்து கன்னி மூல கணபதி கோயிலிற்கு செல்லும் படிக்கட்டுகள் வரை - நீண்ட நிரந்தரப் பந்தல் போடப்பட்டுள்ளது.
கன்னி மூல கணபதியை வேண்டிவிட்டு மலையேறத் துவங்கும்போதே பக்தர்கள் அனைவரையும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நீலமலை, அப்பாச்சன் மேடு ஆகிய இரண்டு மலைகளையும் ஏறிச் செல்லும் பக்தர்களுக்கு இதயம் தொடர்பான உடல் நிலை ஏதும் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு உடனடியாக மருத்துவம் பார்க்க இரண்டு இதய நோய் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
மலையேற்றம் முடியும் அப்பாச்சன் மேட்டின் இறுதியில் பெரும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் கூட்டம் அதிகமாகும்போது பக்தர்களை நிறுத்திவைக்க இந்தப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பக்தர்களை முறைப்படுத்தி அனுப்ப கம்பித் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் நிரந்தரமான அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாச்சன் மேட்டைக் கடந்து சன்னதிக்குச் செல்லும் பாதையின் பெரும்பகுதி சிமெண்ட் கான்கிரீட் போட்டு பக்தர்கள் நடப்பதை சுலபமாக்கியுள்ளனர் (பக்தர்களுக்காக மட்டுமின்றி, டிராக்டர் போக்குவரத்தையும் கருத்தில்கொண்டு பாதைப் போடப்பட்டுள்ளது). பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி பாதையின் சரிவான பக்கத்தில் இரும்புக் கம்பங்களால் ஆன வேலி அமைக்கப்பட்டுள்ளது.
webdunia photo
WD
எல்லாவற்றிற்கும் மேலாக, அய்யப்பன் கோயில் வரலாறு காணாத அளவிற்கு காவல் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. சற்றேறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அடுத்த 60 நாட்களுக்கு பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வரப்போகும் சபரிமலைப் பகுதியில் கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை. சபரிமலை அய்யப்ப சுவாமியை தரிசிக்க அதிக அளவில் வரும் தமிழக பக்தர்களுக்கு ஏற்ற உணவும் கிடைப்பதற்கு போதுமான நல்ல சிற்றுண்டி சாலைகளும் இல்லை.