முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » செய்திகள் » திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை (1008 Thiruvilakku Pooja in Thiruparangundram Murugan Temple)
அதாவது, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கத் தேவையான அளவு மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும் 1008 திருவிளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்வார்கள்.
ஆனால், இந்த ஆண்டு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரத்தில் வருகிறது.
மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானுக்கு தங்கம், பவளம், வைடூரியம் பதித்த அணிகலன்களை அணிவித்து சர்வ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் முருகப்பெருமான், தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நகரில் உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
webdunia photo
WD
இதனால் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று 1008 திருவிளக்கு பூஜை நடத்துவதால் இரண்டு விழாக்களையும் சிறப்பாக செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு மட்டும் கடைசி வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று (7.8.2009) 1008 திருவிளக்கு பூஜையை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவிளக்கு பூஜை குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவிளக்கு பூஜை நாள் அன்று பக்தர்கள் அவர்களது வீட்டில் இருந்து குத்து விளக்கினை மட்டும் எடுத்து வர வேண்டும். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எண்ணை, திரி உள்பட திருவிளக்கு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும், உபயதாரர்களிடம் இருந்து பெற்று இலவசமாக வழங்கப்படும். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் விஜயராகவன், துணை ஆணையர் அழகர்சாமி, மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
இந்த விளக்கு பூஜையைக் காண ஏராளமானோர் திருப்பரங்குன்றத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.