திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி துவங்கி நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்க இருக்கிறது. அன்றில் இருந்து தொடர்ந்து 9 நாட்கள் விழா நடைபெறும்.
இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.வி.ரமணாச்சாரி, அக்டோபர் 1-ந் தேதி காலை துஜாரோகனத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.
அன்றைய தினம் இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
2-ந் தேதி காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் சாமி திருவீதி உலா நடைபெறும்.
3-ந் தேதி காலை சிம்ம வாகனத்தில் திருவீதி உலா. இரவில் முத்துப்பந்தல் அலங்காரம்.
4-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்தில் சாமி திருவீதி உலா. அன்று இரவு சர்வபூபால வாகனம்.
5-ந் தேதி காலை மோகினி அவதாரமும், இரவில் கருட சேவையும் நடைபெறும்.
6-ந் தேதி காலை அனுமந்த வாகனம். அன்று மாலை தங்கரதத்தில் சாமி திருவீதி உலா. இரவில் கஜ வாகனம்.
7-ந் தேதி காலையில் சூரிய பிரபா வாகனமும், இரவில் சந்திர பிரபா வாகனமும் நடக்க இருக்கிறது.
8-ந் தேதி ரதோற்சவம். அன்று காலை பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். இரவு அசுவ வாகனத்தில் சாமி திருவீதி உலா.
9-ந் தேதி காலை சக்கர ஸ்நானம். அன்று இரவு கொடியிறக்கப்பட்டு, பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது என்று அவர் கூறினார்.
|