பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை முன்னிட்டு பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரிசா பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் தேரோட்டம் உச்ச கட்ட காவல்துறை பாதுகாப்புடன் நேற்று தொடங்கியது. ஒரிசா மாநிலம் பூரி நகரில் 12-வது நூற்றாண்டை சேர்ந்த ஜெகன்நாதர் ஆலயம் உலக புகழ் பெற்றதாகும். இந்த கோவிலின் ஆண்டு தேரோட்டம் நேற்று காலையில் தொடங்கியது. மங்கள ஆரத்தி, மைலம், சூரிய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஜெகன்நாதர், பாலபத்திரர், சுபத்திரா தேவி ஆகியோரைத் தாங்கிய 3 தேர்களும் புறப்பட்டன. தேரோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர்.நாட்டின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான இந்த தேரோட்ட திருவிழா 9 நாட்களுக்கு நடைபெறும். பூரி தேராட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருக்கும் ஜெகன்நாதர் ஆலயங்களிலும் ரத ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதுபோல காசியில் பலத்த பாதுகாப்புக்கு இடையே ரத ஊர்வலம் தொடங்கியது. அங்கு, 27-ந் தேதி வரை திருவிழா நடைபெறும்.இமாசல பிரதேசம் ஹமீர்புர் நகரிலும் ஜெகன்நாதர், பாலபத்திரர், சுபத்திரா தேவி ஆகிய கடவுள்களின் சிலைகளுடன் ரத ஊர்வலம் நடந்தது. இந்த மாநிலத்தில் ஒரு வார காலத்துக்கு ஜெகன்நாதர் ரத ஊர்வல திருவிழா நடைபெறும். குஜராத்தில் அகமதாபாத் நகரிலும் ஜெகன்நாதர் ரத விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிக பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், தீவிரவாதிகள் தாக்க கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, பூரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்ட நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுமார் 5,700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடல் வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் கடலோர காவல்படையினரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். |