பொருள் வேண்டியா நான் புவிக்கு வந்தேன், அது கேவலம். அருள் வேண்டும், முக்தி வேண்டும், அதற்கு வழி என்ன? மனிதனுக்கு நாட்டம் பலவற்றில் இருக்கலாம். ஆனால் பயம் மட்டும் ஒன்றில்தான் இருக்கும். அது மரண பயம் அதை எப்படி ஒழிப்பது? நாம் மரணமுறவா பிறந்தோம்? இதற்கு விடை தெரிந்தவன்தான் உண்மையான கல்விக்கற்றவன். அந்த கல்விதான் சாகாக் கல்விதான்- உயர்க் கல்வி. அதைக் கற்கத் தொடங்கினார் சுப்பையா சுவாமிகள். தன் நிலங்களை விற்று ஏழை அன்னதானம் வழங்கினார். பின்னர் கணபதி மூலமந்திரம், ஸ்ரீராம ஜெயம் போன்ற மந்திரங்களை பலருக்கு உபதேசித்தார்.
மீண்டும் குற்றாலம், வள்ளிக் குகை, திருச்செந்தூர் சென்றார். அதுவும் சரிப்படவில்லை. பின்னர் திருப்பதி சென்றார். பிறகு விருத்தாசலம் சென்றார். அங்கிருந்து வடலூரை அடைந்தார். அங்கு சில மாதங்கள் தங்கினார். பின்னர் அங்கிருந்து திருக்கழுக்குன்றம் வந்தடைந்தார். 1951ஆம் ஆண்டு அங்கு வந்த சுப்பையா சுவாமிகள், அங்குள்ள மலையின் மீது அமர்ந்து யோக பயிற்சி செய்வார். அப்போது அவருக்கு பால், பழம் கொடுத்து உபசரித்தனர். இரவில் விஷ ஜந்துக்கள், புலி, சிறுத்தை எல்லாம் நடமாடும் இடத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். சுவாமி புன்முறுவலுடன் இரண்டொரு வார்த்ததை கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் மரணத்திற்கு மூலங்களை நசிக்கும் உபாயத்துடன் தவம் மேற்கொண்டதால் பேசுவதைநிறுத்திக் கொண்டார். தனக்கு முன்பாக திருவருட்பா என்ற நூலை மட்டும் எப்போதும் வைத்திருப்பார். பின்னர் அங்குள்ள மக்களால் கடையனோடை சுவாமி என்றும், பி.ஏ. சுவாமி என்றும், திருக்கழுக்குன்றம் சுவாமி என்றும் அழைக்கப்பட்டார்.
சுப்பையா சுவாமிகள் கடையனோடையில் அவதாரம் செய்தது முதல் திருக்கழுக்குன்றத்தில் முக்தியடைந்தது வரை அவருக்கு இவ்வுலக உயிர்கள், சடமாயிருந்த கோயில்கள், சமாதிகள் முதலியவற்றுடன் நிறையத் தொடர்புகள் உண்டு. எவ்வுயிருக்கும் தீங்கு நினைக்காதவனே வைஷ்ணவன் என்பர். அவ்வழி வந்தவர் எவ்வுயிருக்கும் எவராலும் தீங்கு வரக்கூடாது என எண்ணுபவன் சன்மார்க்கி என வைஷ்ணவத்தில் இருந்து சம்மார்க்கம் வரை அவர் வந்த பாதையை பார்க்கும் போது அவரின் உயிர் எத்தகைய உறவை ஒவ்வொன்றிலும் நிலை நாட்டியிருக்கிறது எனப் பார்த்தால் தெளிவு ஏற்படும்.
|