தாமிரபரணி நதி சீராட்டும் திருநெல்வேலி அருகில் உள்ள கடையனோடை என்னும் கிராமத்தில் வில்லிமுத்துக் கோனார்-நாராயணவடிவு தம்பதியருக்கு 23.11.1908 ஆம் ஆண்டு பிறந்தவர் மகான் சுப்பையா சுவாமிகள். ஒரே ஆண் வாரிசான இவர், படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இருந்தார். அப்போது இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து பல கோயில்கள், சமாதிகளை சுற்றி வருவார்.
ஐந்தாம் வகுப்பு வரை கடையனோடையில் படித்த இவர், இப்படி கோயில், சமாதி என்று சுற்றி திரிந்ததால் அவரது பெற்றோர், மூத்த மகள் இருக்கும் குலசேகரபட்டினத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள பெரிய பள்ளியில் சேர்ந்தார்.
ஆனால் அங்கு சுப்பையா சுவாமிக்கு நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை. வார விடுமுறை நாட்களில் அருகில் உள்ள திருச்செந்தூர் சென்று அங்குள்ள வள்ளிக் குகை, மூவர் சமாதி போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து கொள்வார். அப்போது அங்கு வரும் சாதுக்களுடன் சித்த வைத்தியம், யோகம் போன்றவற்றை கற்றுக் கொண்டார். பின்னர் மூலிகை மருந்துகள் தயாரித்து பலருக்கு சிகிச்சை செய்தார். 7ஆம் வகுப்பு வரை குலசேகரபட்டினத்தில் படித்த அவர், மீண்டும் கடையனோடைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். பின்னர் ஆழ்வார் திருநகரிலுள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பும், திருவைகுண்டம் காரனேஷன் உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். இதையடுத்து மதுரைக்கு சென்று பி.ஏ. படித்து முடித்தார்.
கல்லூரி பேராசிரியராக இருந்த கல்யாணம் ராமசாமி என்பவருடன் தங்கி சித்துகளிலும், மருத்துவத்திலும், ஆராய்ச்சியிலும் பயிற்சி பெற்றார். மேலும் மூலிகை, வைத்தியம், உடற்கூறு, சித்துகள், உறங்காமை, உண்ணாமை போன்ற பயிற்சி பெற்றார். ஆனால் அதில் நாட்டமில்லை.
|