சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கான மிகச் சிறந்த நாள் என்று மகா சிவராத்திரி தினத்தை புராணங்கள் குறித்துள்ளன.
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மிகுந்த மகத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை மகா சிவராத்திரி என்றழைக்கின்றனர்.
மாசி மாதத்தில் வரும் மகா மகத்தைப் போலவே, மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியும் சிறப்பானது. மாசி மாதத்தில் - தனது வீடான - கும்ப ராசியில் சூரியன் வருகிறான். ஆத்ம காரகனான சூரியன் தன் வீட்டைப் பார்க்கும் போது சிவனின் வடிவமான லிங்கத்தையும், பார்வதியையும் வணங்கினால் நினைத்தது நிலைபெறும்.
அதுமட்டுமின்றி, சதுர்தசி திதிக்குத் தனி சக்தி உண்டு. அது வெற்றிகளைக் கொடுக்கக் கூடியது. எனவேதான் மகா சிவராத்திரி தினத்தன்று சிவன் கோயிலிற்குச் சென்று இரவு நேரத்தில் நடைபெறும் நான்கு கால - மாலை 6 மணிக்குப் பிறகு மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் - பூசைகளைக் கண்டு, வணங்கி, விழித்திருந்து விரதமிருக்கும் வழக்கம் உள்ளது.
சிவன் கோயில்களில் மாலை 6 மணிக்குப் பிறகு 4 சாம (ஒரு சாமம் = 3 மணி நேரம்) பூசைகள் நடத்தப்படும். அவைகள் அனைத்திலும் பங்கேற்று சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமானை வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்து, பூசை செய்து வணங்குதல் சிறப்பாகும். இரவு முழுவதும் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
ஜப மாலை, படிக மாலை ஆகியவற்றைக் கொண்டு சிவனைத் துதித்து ஜபம் செய்வதும் நற்பலனையளிக்கும்.
மகா சிவராத்திரியன்று எந்த சிவன் கோயிலிற்குச் சென்றும் வழிபடலாம். விரதமிருந்து, இரவு விழித்து, சாம பூசைகள் கண்டு வழிபட்டப் பின் விடியற்காலையில் குளித்து மீண்டும் சிவாலயம் சென்று வழிபட்டு விரத்த்தை முடிப்பது வழமையாகும்.
மகா சிவராத்திரி தோன்றியது எப்படி?
சிவபெருமானின் அங்கமான பார்வதி தேவி விளையாட்டாக ஒருமுறை சிவனின் கண்களைத் தனது கரங்களால் மூடிவிட, சிவனின் கண்களே சூரியனும், சந்திரனும் ஆதலால், பிரபஞ்சத்தை இருள் சூழ்ந்தது. இருளில் இருந்து பிரபஞ்சத்தை மீட்க தேவர்களும், முனிவர்களும் ஒரு நாள் முழுவதும் சிவனிற்கு பூசை செய்தனர். அந்த நாளே மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
|