இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் என்பதற்கு இடம் பெயர்தல் என்று பெயர். முதல் நபி ஆதம் (அலை) அவர்கள்தான் முதன்முதலில் ஹிஜ்ரத் சென்றவர்கள். கடைசி நபி முகம்மது (ஸல்) அவர்களும் மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர்தான் இஸ்லாம் வளர்ந்தது.
முகம்மது நபி அவர்கள் ஹிஜ்ரத் சென்றதை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி என்று பெயரிட்டப்பட்டது. மேலும் முகம்மது நபி அவர்கள் ஹிஜ்ரத் பயணம் (கி.பி.622) மேற்கொண்ட ஆண்டையே ஹிஜ்ரி முதல் ஆண்டாகக் கணக்கிடப்பட்டது.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் தான் முகரம். மற்றவை முறையே ஷஃபர், ரஃபியுல் அவ்வல், ரபியுல் ஆஹிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்ஹதா, துல்ஹஜ் ஆகும்.
முகரம் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புத்தாண்டு துவக்கமாகும். மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றின் பெருமைக்குரிய நிகழ்வுகளும் நடந்துள்ளது. ஒரு துக்கச் சம்பவமும் நடந்துள்ளது.
இந்த துக்கச் சம்பவம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணம்தான். நபிகளாரின் மகள் பாத்திமாவுக்கும், அலி(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள் அசன், ஹுசைன். இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் ஹுசைன் ஹர்பலா யுத்தத்தின் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.
துக்க தினமாக அனுஷ்டிப்பு !
இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.
அரபியில் அசரா என்றால் 10 என்று பொருள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்நிகழ்வு பிரதானமாக உள்ளது. தமிழகத்திலும் சில இடங்களில் இந்த உடல் வருத்தல் சடங்கை நடத்துகிறார்கள். மேலும் இறந்தவர்களின் நினைவாக துஆக்கள் ஒதப்படுகின்றன.
நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த முகரம் தினத்தையொட்டி 'பஞ்சா' எடுக்கப்படுகிறது. 40 நாட்கள் நோன்பிருந்த சிறுவனை ஒரு குதிரையில் ஏற்றி வைத்து ஊர்முழுவது சுற்றி வந்து கடைசியில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று வரும் நிகழ்வே 'பஞ்சா' எனப்படுகிறது.
இந்த முகரம் மாதத்தில்தான் அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கு அதிசயங்களை நிகழ்த்தியுள்ளான். வானம், பூமியைப் படைத்தது, இஸ்லாமின் முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) ஆகியோரைப் படைத்தது, மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் (அலை) அவர்களை மீட்டது, நெருப்புக் குண்டத்திலிருந்து இஸ்மாயிலை(அலை) காப்பாற்றியது உள்பட பல்வேறு நிகழ்வுகள் இந்தமாதத்தில் நடைபெற்றுள்ளது.
|