கிரிவலம் செல்லும் கோயில்களில் தமிழ்நாட்டில் முதலிடமாக விளங்குகிறது திருவண்ணாமலை கோயில். ஈசனின் முடியையும், அடியையும் காண முடியாத பிரம்மா, விஷ்ணுவற்கு ஜோதி ரூபத்தில் காட்சி அளித்தார் சிவபெருமான். ஊழ்வினைகளை நீக்கி, மக்களை பாதுகாக்கும் தலமாக விளங்குவது திருவண்ணாமலை திருத்தலம்.
பெளர்ணமி நாள் இரவில் அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் சென்றால் ஊழ்வினை நீங்கிவிடும். மலைச்சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனும், 2வது அடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலனும் உண்டாகும். 3வது அடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனும், 4வது அடி எடுத்து வைக்க அனைத்து யாகங்களும் செய்த பலன்களும் கிடைக்கும்.
மலை வலம் வரும்போது சிவனின் சிவந்த ஜோதிக் கதிர்கள் மலையில் இருந்து வெளிப்பட்டு பக்தர்கள் மீது படிவதால் கர்ம வினைகள் அழிகிறது. பெளர்ணமி நாளில் இரவில் மலை சுற்றுவது சிறப்பு. பகலிலும் வலம் வரலாம். எந்த நாளும் இறைவனுக்கு சிறப்புத்தான். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் மலையில் ஜோதி தரிசனத்தை வணங்கி விட்டு மலை சுற்றவேண்டும்.
அன்றைய தினத்தில் அதிகாலையில் கோயிலுக்குள் பரணி தீபம் ஏற்றியவுடன் மலையை சுற்றி விட்டு மாலையில் மலை மீது மகா தீபம் ஏற்றியவுடன் மீண்டும் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.
அறிந்தோ அறியாமலோ நாம் செய்த அனைத்து பாவங்களும் விலக அண்ணாமலை சுற்றி இறைவனை வணங்குவோம்.
|