இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.
எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
ரோம இதிகாசங்களில் ஈஸ்டர் என்ற பெண் கடவுள் விடியலுக்கான தேவதையாக சித்தரிக்கப்படுகிறார். இந்த தேவதையின் பெயர்தான் ஈஸ்டர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதாக மொழியாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு 'வசந்த காலம்' என்ற அர்த்தமும் உண்டு.
இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலகையும் அதன் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார்.
உலகின் மீட்பிற்காக அனுப்பி வைத்தார்!
தன்னுடைய சாயலாக ஆசை, ஆசையாக படைத்த மனிதன், பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி விட்டார் தேவன்.
அதன்பின் ஆதாமும், ஏவாளும் ஆணும், பெண்ணுமாக ஏராளமான பிள்ளைகளை பெற்றார்கள். மனித குலம் பல்கிப் பெருகி கடற்கரை மணல் போல் பன்மங்கானது. அதைவிட வேகமாக பாவம் பல்கிப் பெருகியது. பாவத்தின் சாபத்தால் மனிதர்கள் மூப்படைந்து மறித்தார்கள். அவர்களின் ஆத்மாக்கள் வீணாய் அழிந்தன.
ஆதாமும், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலத்தின் மீது இறைவன் கருணையுடனே இருந்தார். நோவா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள்.
அவர்களுக்காக பரிதவித்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.
உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஏழை தச்சரான ஜோசப்- மரியாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் பின் உலக மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.
|