கனிகளில் பறித்த பின்னும் ஜீவனுடன் இருப்பது எலுமிச்சைதான் என்றும், அது மங்களகரமானது என்றும் ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன் கூறுகிறார்!
நமது பண்பாட்டு ரீதியான பழக்க வழக்கங்களில் உள்ள அர்த்தங்களை விவரித்த வித்யாதரன், எலுமிச்சையின் குணங்களையும், அதனைப் பயன்படுத்துவதில் உள்ள ரகசியங்களையும் விளக்கினார்.
"மஞ்சள் மங்களகரமான நிறம். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களில் பட்டியலைத் தயாரிக்கும் பொழுதும், புத்தாடை புனையும் பொழுதும், நிச்சயதார்த்தம் செய்து எழுதும் ஓலையிலும் ஒரு ஓரத்தில் அல்லது 4 ஓரத்திலும் மஞ்சளைத் தடவுகின்றோம். ஏனெனில் அது மங்களமானது.
மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது. வேதங்களில் அதர்வன வேதத்தில் முதலில் தேவதைகள், அதிதேவதைகள் ஆகியவற்றிற்கு பரிகாரப் பூஜைகள் செய்யும் போது எலுமிச்சைப் பழத்தை பலியிடுவது வழக்கம். அதற்குக் காரணம், அந்தப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. ஜீவன் உடையதைதானே பலியிட முடியும்.
அறிவியலபடி எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த சிட்ரிக் அமிலம் கிருமி நாசினி. பித்தம், கபம் போன்றவற்றையெல்லாம் நீக்கக்கூடியது. இந்தப் பழத்தில் இருந்து வீசக்கூடிய வாசமே குதூகலமான சூழலை உருவாக்கவல்லது.
எலுமிச்சைக் கன்று, மரம் ஒரு வீட்டில் இருந்தால் வைத்தியரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை, வாஸ்து பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்று முன்னோர்கள் கூறுவார்கள்.
|