நமது இந்தப் புண்ணிய பூமியாகிய பாரத தேசத்தில் சமயமும் சாஸ்திரமும் தழைத்து வளர்ந்தன. மகான்களுக்குப் பிறப்பளித்த தேசமும், தியாக பூமியும் நமது தாய் நாடேயாகும். மிகப் பண்டைட்க காலத்திலிருந்து இன்று வரை மனித வாழ்க்கையின் மகத்தான லட்சியம் விளங்கி வந்திருப்பது இந்த நாட்டிலேதான்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிறப்பியல்பு, ஒரு தனிப்பட்ட நோக்கம் உண்டு. அதைத் தவிர மற்றவை எல்லாம் அந்த நாட்டிற்கு இரண்டாம் தரமான முக்கியத்துவம் உடையவையாகவே இருக்கும். இந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் சிறப்பியல்பு அதன் மதமாகும். சமூகச் சீர்திருத்தமும் மற்றவையும் இந்தியாவிற்கு இரண்டாம் தரமான முக்கியத்துவமுடையவையே ஆகும்.
நமது நாட்டின் உயிர் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் சாம்பல் பூத்து இறந்துவிட்டதைப் போலக் காணப்படுகிறது. ஆனால் அதனடியில் நெருப்பைப் போன்று அது இன்றும் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டின் வாழ்க்கை மதத்தில் தான் அமைந்திருக்கிறது. அதன் மொழியும் மதம்தான். மதமே அதனுடைய கருத்துக்கள். அதனுடைய அரசியல், சமுதாயம் நகராட்சி மன்ற அமைப்புக்கள், பிளேக் தடுப்பு வேலைகள், பஞ்ச நிவாரணப் பணிகள் ஆகிய இவை எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இனிமேலும் அப்படியே நடத்தப்பட வேண்டும். அவ்விதம் இந்தப் பணிகள் நடத்தப்படாவிட்டால், எனது நண்பரே, உம்முடைய எல்லாக் கூச்சல்களும் புலம்பல்களும் ஒன்றுமே இல்லாமல் பயனற்றவையாக முடிந்து போகும்.
இந்திய மக்களாகிய நீங்கள் உங்கள் மதத்தை மட்டும் புறக்கணித்துவிட்டு, அரசியல், சமூக ஏற்பாடு முதலியவற்றுள் எதனை உங்கள் நடுநோக்கமாய், தேசிய வாழ்க்கையின் உயிர் நாடியாக வைத்துக் கொண்டாலும், அதன் முடிவு நீங்கள் அடியோடு அழிந்துவிடுவதாகவே இருக்கும்.
உலக வரலாற்றைக் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு ஓர் உண்மை தென்படுகிறது. அதாவது, இயற்கையின் விதிமுறைக்கு இணங்க, பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ஜாதிகள் ஜான்கும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக முறையே உலகத்தை ஆண்டு வருகின்றன.
சமுதாயத்தின் தலைமைப் பதவி, கல்வியைத் தமது சுய உரிமை என்று கொண்டாடுபவர்களின் கையிலோ, செல்வத்தின் சக்தியையோ ஆயுத வலிமையையோ கையாள்பவர்களின் கையிலோ இருப்பினும், அதன் சக்திக்கு மூலம், எப்போதும் குடிமக்களே ஆவர்.
உலகிலுள்ள அத்தனை முன்னேற்றத்திற்கும் தங்களின் இதயத்தின் இரத்தத்தைக் கொடுத்து உழைத்திருக்கிறார்களே பாமர மக்கள், அவர்களைப் புகழ்வதற்கு யார் இருக்கிறார்கள்? ஆன்மீகத்திலும் யுத்தத்திலும் கவிதையிலும் உலகை வென்ற தீரர்களே அனைவரின் கவனத்தையும் கவருகிறார்கள். அவர்களே மனித குலத்தின் மரியாதைகளையும் பெறுகிறார்கள். ஆனால், கவனிப்பாரின்றி, ஊக்குவிப்பாரின்றி, வெறுப்பையே பெறும் சூழ்நிலையில் வாழ்ந்து, எல்லையற்ற பொறுமையும் அளவற்ற அன்பும் உறுதி தளராத உழைப்பும் கொண்டு நம் பாமர மக்கள் தங்கள் வீடுகளில் தங்கள் கடமையை இரவும் பகலும் சிறிதும் முணுமுணுப்பின்றிச் செய்து வருகிறார்கள். அவர்களின் இந்த வாழ்க்கையில் வீரம் இல்லையா?
உழவர், சக்கிலியர், புலையர் என்னும் ஏழை ஜாதி மக்களிடம் உங்களுக்கு இருப்பதைவிடவும் தொழில் செய்யும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. உங்களைவிடவும் அவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் உண்டு. நீண்ட நெடுங்காலமாக வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசாமல் அவர்கள் உழைத்து நாட்டிலுள்ள செல்வம் முழுவதையும் திரட்டி வைத்தார்கள்.
உங்களைப் போலச் சில புத்தகங்களை அவர்கள் படிக்கவில்லை என்றும், உடையளவில் இருக்கும் நாகரிகத்தை அவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை என்றும் அவர்களைப் பற்றித் தாழ்வாக நினைத்து விடாதீர்கள். இந்தச் சில புத்தகப் படிப்பும் உடையலங்காரமும் அவர்களுக்கு இல்லாததனால் என்ன போயிற்று? எல்லா நாடுகளிலும் நாட்டின் ஆதாரமான முதுகெலும்பு போன்று இருப்பவர்கள் அந்த நாட்டின் உழைப்பாளி மக்களே ஆவர். தாழ்ந்த வகுப்பினர் என்று நீங்கள் நினைக்கிற இவர்கள் தமது தொழிலைச் செய்வதை நிறுத்திவிடுவார்களேயானால், உங்களுக்கு உணவும் உடையும் எங்கிருந்து வரும்? கொல்கட்டா நகரிலுள்ள தோட்டிகள் ஒரு நாளைக்குத் தங்கள் வேலையை நிறுத்திவிட்டால், எல்லோருக்கும் கலக்கம் ஏற்பட்டு விடுகிறது. தொடர்ந்து அவர்கள் மூன்று நாட்களுக்கு வேலையை நிறுத்திவிட்டாலோ தொற்று நோய் தோன்றி நகரம் முழுவதையும் அழித்துவிடும். பல்வேறு தொழில் செய்யும் தொழிலாளர்கள் தொழில்களை நிறுத்தி விடுவார்களேயானால், உங்களுக்கு வேண்டிய உணவும், உடையும்கூட உங்களுக்குக் கிடைக்காமலே போகும். இத்தகைய மக்களைத் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லி நீங்கள் உங்கள் பண்பாட்டைப் பெரிதாகப் புகழ்ந்து கொள்கிறீர்களே!
உழைக்கும் பாமர மக்களாகிய இவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒருவித முணுமுணுப்புமின்றி எண்ணற்ற கொடுமைகளைச் சகித்து வந்திருக்கிறார்கள். அதன் விளைவாக இன்று தளராத மன உறுதியைப் பெற்றிருக்கிறார்கள். எல்லையற்ற துன்பங்களை அனுபவித்ததன் விளைவாக இன்று இவர்கள் அழியாத ஊக்கத்தைப் பெற்றுவிட்டார்கள். ஒரு பிடிச்சோற்றை உண்டு வாழும் இவர்கள், உலகையே ஆட்டுவிக்கும் வல்லமை பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு அரை வயிற்றுக் கஞ்சி கிடைத்தாலும் அதுவே போதும். அகில உலகமும் இவர்களுடைய சக்தியைத் தாங்காது. இரத்த பீஜன் என்ற அசுரனைப் போல வற்றாத உயிர்ச் சக்தி நிரம்பியவர்களாக இவர்கள் திகழ்கின்றனர். இதுமட்டுமின்றி, தூய்மையாகவும் நல்லொழுக்கத்துடனும் வாழ்வதனால் ஏற்படக் கூடிய அற்புதமான மனவலிமையும் இவர்களிடம் உள்ளது. இதைப் போன்ற அமைதியும், திருப்தியும், அன்பும், பொறுமையுடன் கூடிய இடைவிடாத உழைப்பும், நெருக்கடியான சமயங்களில் காட்டும் சங்கத்தைப் போன்ற பலமும் வேறு எங்கே காண முடியும்?
மகத்தான ஒரு செயலை செய்யும் வாய்ப்பு ஏற்படும்போது பலரும் தீரர்களாக மாறுவது சுலபம். ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டிப் புகழக் காத்திருக்கும் போது ஒரு கோழையும் தன் உயிரைத் தியாகம் செய்யலாம். சுயநலமே உருவானவன் சுயநலமற்றவனாக நடந்து கொள்ளலாம். எவருமே கவனிக்காத ஒரு சிறிய காரியத்தைச் செய்யும் போதும் எவனொருவன் அதே அளவில் கடமையில் கருத்தும் சுயநலமின்மையும் கொண்டிருக்கிறானோ அவனே உண்மையில் கடவுளின் ஆசிக்கு உரியவன் ஆவான். அத்தகைய உண்மை வீரர்களாகிய இந்தியாவின் உழைப்பாளி மக்களே! எல்லாக் காலத்திலும் பிறர் காலடியில் மிதியுண்டு அவதிப்படும் உங்களை நான் வணங்குகிறேன்.
இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய விஷயம் எதையுமே நம்முடைய பொதுமக்கள் உணரவில்லை. அறியாமைதான் அவர்களைச் சூழ்ந்து நிற்கிறது. நம்முடைய பொதுமக்ள் மிகவும் நல்லவர்கள். ஏனென்றால், நமது நாட்டில் வறுமை ஒரு குற்றமாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் கொடூரமாக நடந்து கொள்ளும் இயல்புடையவர்கள் அல்லர். எனது உடை காரணமாக அமெரிக்காவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி - பல முறை மக்கள் கூச்சலிட்டு என்னைச் சூழ்ந்தும் கொண்டார்கள். ஒரு தனிப்பட்ட உடையை அணிந்து கொண்டதற்காக இந்தியாவில் மக்கள் ஒருவனைச் சூழ்ந்து கொண்டார்கள் என்ற நிகழ்ச்சியை நான் இதுவரை கேட்டதே இல்லை.
மேலைநாட்டு ஏழை மக்களைப் பேய்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களோடு ஒப்பிட்டால் நம் நாட்டு ஏழை மக்களைத் தேவதூதர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆகவே நமது ஏழை மக்களின் நிலையைச் சுலபமாக உயர்ததிவிடலாம். நம் நாட்டுப் பொதுமக்கள் எல்லா விதத்திலும் ஐரோப்பிய நாட்டுப் பொதுமக்களை விட நாகரிகம் வாய்ந்தவர்களே ஆவர்.
|