இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில், நிலத்தடி நீர்மட்டத்தை மிகச் சாதாரணமாக அறிந்து கூறும் ஒருவரின் திறனைப்பற்றியும், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் உங்களுக்கு கூறப்போகின்றோம்.
ஆங்கில எழுத்தான ஒய் வடிவில் உள்ள ஒரு குச்சி, ஒரு தேங்காய் ஆகிய இரண்டின் உதவியால் நிலத்தடி நீர் மட்டத்தை கண்டறிய முடியுமா? மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒருவர் இவ்விரண்டையும் பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அறியும் ஞானத்தைப் பெற்றுள்ளார் என்று கேள்விப்பட்டதும் அவரை உடனடியாக சந்தித்துவிட வேண்டும் என்று அவர் இல்லம் நோக்கி பறந்து சென்றோம்.
அவர் பெயர் கங்கா நாராயண் சர்மா. ஒய் வடிவ குச்சியைக் கொண்டும், தேங்காய் ஒன்றின் உதவியுடனும் தன்னால் நிலத்தடி நீர் இருப்பை உறுதியாகக் கூற முடியும் என்றார்.
ஒரு கட்டுமனையில் எந்த இடத்தில் தரைக்கு அருகில் நீர் மட்டம் உள்ளது என்பதையும், எங்கு நீர் இருப்பு அதிகம் உள்ளதென்பதையும் தன்னால் கூற முடியும் என்கிறார் கங்கா நாராயண் சர்மா.
ஒய் போன்ற அந்தக் குச்சியின் முனைகளை தனது இரண்டு உள்ளங் கைகளுக்கு இடையே லேசாக பிடித்துக் கொண்டு வீட்டு மனைக்குள் மெதுவாக நடக்கும்போது எங்கு நிலத்தடி நீர் தரை மட்டத்திற்கு அருகே உள்ளதோ அங்கு அவர் கையில் பிடித்துள்ள குச்சி வேகமாக சுற்றுமென்றும், அதைக்கொண்டு அந்த இடத்தில் கிணறு வெட்டவோ அல்லது ஆழ் துளை குழாய் அமைத்து நீர் எடுக்கவோ தான் பரிந்துரைப்பதாக கூறுகிறார்.
|