மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜால்பூர் கிராமத்தில் நடைபெறும் ஒரு பூஜையின் போது கையில் ஆரத்தி தட்டுகளுடன் சென்று வழிபடும் பக்தர்களை பீடித்துள்ள ஆவிகள் நீங்கி, அவர்கள் முழுமையாக குணமடைவதாகக் கேள்விப்பட்டோம்!
ஆவிகள் பீடித்துள்ளவர்களை இந்தப் பூஜையில் கலந்துகொள்ளச் செய்தால் அவர்களை பிடித்துள்ள ஆவி அகன்றுவிடும் என்று அப்பகுதி மக்கள் நம்புவதாக அறிந்ததும் மிகுந்த ஆர்வத்துடன் அந்தக் கோயிலிற்குச் சென்றோம்.
இந்தக் கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று இக்கோயிலின் பூசாரி மகேஷ் மகராஜ் கூறினார். தனது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக இந்தக் கோயிலைப் பராமரித்து வருவதாகவும், தான் ஏழாவது தலைமுறை என்றும் கூறினார்.
தனது முன்னோர்களில் ஒருவரான ஹரினுமா சாஹேப் என்பவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து தவம் செய்ததன் காரணமாக அவர் முன் தத்தேத்ராயா தோன்றியதாகவும், அவர் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, இத்திருக்கோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்க வேண்டும் என்றும், இங்கு வரும் எவரும் வெறும் கையுடன் திரும்பக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
அந்தநாள் முதல் இக்கோயிலில் தத்தேத்ராயாவின் சக்தி இருந்து வருவதாக மகேஷ் மகராஜ் கூறினார்.
கோயிலிற்குள் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அன்றைக்கு வெள்ளிக்கிழமை என்பதால் ஆவிகளைத் துரத்துவதற்கான மகா ஆரத்தி நேரம் நெருங்கியதும் ஆவி பீடித்துள்ளவர்கள் கற்பூரம் ஏற்றப்பட்ட தட்டுகளை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு அந்த மகா ஆரத்தி பூஜையில் கலந்துகொள்ளச் சென்றனர்.
|