தமிழர்களின் பண்டிகையான பொங்கல் தினத்தையொட்டி நடத்தப்படும் புகழ்பெற்ற வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. சீறி வரும் காளைகளை அடக்கும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விலங்குகள் நலவாரிய அமைப்பு, பாரம்பரிய வீர விளையாட்டு என்ற பெயரில் காளைகளை கொடுமைப் படுத்துவதாகக் கூறி அதற்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில், புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் மதுரை மாவட்டம் பாலமேடுப் பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை உங்களுக்கு வழங்குகிறோம். அதனைப் பார்த்த பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இது பாரம்பரிய வீரதீர ஜல்லிக்கட்டா அல்லது தேவையற்ற விளையாட்டா என்பதனை.
காலம் காலமாக தமிழர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது ஜல்லிக்கட்டு. காளைகளை அடக்கும் ஆண்களைத்தான் அந்த காலத்தில் பெண்கள் திருமணம் செய்து கொண்டதாக சில தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரீகங்கள் பற்றிய தொல்லியல் ஆராய்ச்சியில் கூட ஜல்லிக்கட்டுப் பற்றிய வரலாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 400 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் - ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக கன்றுக்குட்டியில் இருந்தே பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் கொம்புகள் கூராக்கப்பட்டு (இம்முறை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காளைகளின் கொம்புகள் மழுங்கடிக்கப்பட்டன) - யாராலும் நெருங்க முடியாத, சீறிப்பாயும் காளையாக வளர்க்கப்படுகின்றன.
|