"நமது நாடு முட்டாள்களால் நிரம்பியுள்ளது. நானும் அதில் ஒருவன். ஏனென்றால், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்பவனின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்டவன்" என்று கூறினார் மத்தியப் பிரதேச மாநிலம் செம்லியா சாவ் கிராமத்தைச் சேர்ந்த வாகாடி என்பவர்.
தன்னை கடவுள் என்று பிரகடனம் செய்துகொண்டு ஏமாற்றி வரும் சந்தியநாம் வித்யால்தாஸ் என்பவரிடம் தான் ஏமாந்த கதையை இவர் எங்களிடம் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாடா மாவட்டத்தில் உள்ள சீன்ச் என்ற கிராமத்தில் அதீத சக்திகளைப் பெற்ற ஒருவர் உள்ளார் என்று சுரேஷ் வாகாடி கேள்விப் பட்டதில் இருந்து இக்கதை துவங்குகிறது. தனது கிராமத்தில் இந்த நபரைப் பற்றிய குறுந்தகடுகளும், கைப்பிரதிகளும் விநியோகிக்கப்பட்டபோது, சத்தியநாம் வித்யால்தாஸைப் பற்றி சுரேஷ் வாகாடி அறிய வந்துள்ளார்.
சாதாரண கத்தியைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் சத்தியநாம் வித்யால்தாஸ், எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்த முடியும் என்றும், அதற்காக எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை என்றும், அந்தக் கைப்பிரதிகள் கதை கூற, அதை நம்பி சிகிச்சைக்குச் சென்ற சுரேஷ் வாகாடி ஏமாற்றப்பட்டுள்ளார்.
சுரேஷ் வாகாடியின் ஏமாற்றத்திற்கு அடிப்படையான அந்தக் குறுந்தகட்டை நாங்களும் கண்டோம். அதில் சத்தியநாம் கடவுள் என்றே பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். காவல் துறையினர் போல ஆடை அணிந்த பலர் அவரைச் சுற்றி பாதுகாப்பாக நின்றிருந்தனர். அங்கு செய்துள்ள ஏற்பாடுகளெல்லாம் அப்பாவி கிராம மக்களை மிகச் சுலபமாக ஏமாற்றுபதைப் போல செய்யப்பட்டிருந்தது. அந்த குறுந்தகட்டில்¨ உள்ள சில பகுதிகளை நாங்கள் வீடியோவில் தந்துள்ளோம். அந்த வீடியோவை மிகக் கவனமாகப் பாருங்கள். அறுவை சிகிச்சையின் போது இந்த நபர் செய்யும் ஏமாற்று வேலையை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.
கத்தியை வைத்து நோயாளியின் மீது லேசாக கீறல் போட்ட பின்னர் அவருடைய உடலில் இருந்து ஒரு சதைப் பிண்டத்தை எடுத்து வெளியில் காட்டி நோய் பீடித்திருந்த அந்தப் பகுதியை தான் வெளியே எடுத்துவிட்டதாக காட்டுகிறார். ஆனால், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரே ஒரு சதைத் துண்டை இவர் கையில் மறைத்து வைத்துக்கொண்டே நோயாளியின் உடம்பில் கத்தியால் கீறுகிறார். பிறகு அவருடைய உடலில் எடுக்கப்பட்டது போல காட்டுகிறார். இதுதான் இவர் செய்யும் ஏமாற்றுவேலை.
|