நமது நாடு நம்பமுடியாத பல அதிசயங்ளையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டது. பல்வேறு பாரம்பரியங்களையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. எப்போது நம்பிக்கை கண்மூடித்தனமாக மாறுகிறதோ அப்போது இந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகளாக கருதப்படுகின்றன. நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த வாரம் பசுமாடுகளை அடிப்படையாகக் கொண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொண்டாடப்படும் ஜபுவா என்று பொதுவாக அழைக்கப்படும் காய் கெளரி விழாவைக் காணலாம்.
நமது நாட்டில் பசு மாட்டினை அன்னைக்கு சமமாக மதிப்பது வழக்கம். இன்னமும் பல கிராமங்களில் பசு மாடுதான் பல குடும்பங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளது. இதுபோன்ற கிராம மக்கள் காய் கெளரி பண்டிகை அன்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் பசுவை தாயாக அல்லது தெய்வமாக மதித்து பூஜைகள் செய்கின்றனர். இந்த பண்டிகை தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கிராமத்தினர் தங்களது பசுக்களை நன்கு குளிப்பாட்டி அவற்றை மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கின்றனர். பின்னர் அங்குள்ள கோவர்தன் கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்கின்றனர்.
பூஜைகள் செய்தபின்னர் தங்களது பசுக்கள், அதன் கன்றுகளுடன் கோயிலை 5 முறை வலம்வருகின்றனர். இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் பசுக்களும், கன்றும் கோயிலை சுற்றி வரும் பாதையில் மக்கள் விழுந்து பசுக்களை வணங்கியபடி படுத்துக் கொள்கின்றனர். பசுக்களும் கன்றுகளும் அவர்களின் உடலை மிதித்துக் கொண்டே செல்கின்றன. அப்போது பசுக்களை நோக்கி கோமாதா என்று அவர்கள் கோஷமெழுப்புகின்றனர்.
கிராம மக்கள் தங்களை காப்பாற்றும் பசுவிற்கு பூஜை செய்வதை மிகுந்த மகிழ்ச்சியுடனும், குதூகலத்துடனும் செய்கின்றனர். ஆனால் கோமாதாவை வணங்குவதில் இப்படி ஒரு அணுகுமுறையை பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் எந்த பயமும், வெறுப்பும் இன்றி கடைபிடித்து வருகின்றனர். மேலும், அன்றைய தினம் முழுவதும் அவர்கள் உண்ணா நோன்பும் கடைபிடிக்கின்றனர்.
|