கை ரேகை, எண் ஜோதிடம், கணிதம், வாக்கு என்று நமது நாட்டில் பல வகையான ஜோதிட முறைகள் உள்ளன. இவைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டு இன்று வரை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு ஜோதிட முறையே நாடி ஜோதிடம் என்பது.
நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் நாடி ஜோதிடம் எனும் ஆச்சரியப்பட வைக்கும் ஜோதிட முறையின் மையமாகத் திகழும் சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
நாடி ஜோதிடத்தின் மூலம் உங்களது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று கூறி அழைக்கும் பெயர் பலகைகள் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன.
 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
இத்தலத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கடல் கடந்து வாழ்பவர்கள் கூட இத்திருத்தலத்திற்கு வந்து வைத்தீஸ்வரனின் தரிசனத்தைக் கண்டும், நாடி ஜோதிடத்தின் மூலம் தங்களது எதிர்காலத்தைக் கண்டும் செல்கின்றனர்.
கூ.வி. பாபுசாமி என்கின்ற நாடி ஜோதிடரை நாங்கள் சந்தித்தோம். நாடி ஜோதிடம் என்னவென்பதை அவர் நமக்கு விளக்கினார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமுனிவர் அகத்தியர் நாடி ஜோதிடத்தை அருளியதாகக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து கெளசிக ரிஷியும், சிவ வாக்கியர் என்கிற சித்தரும் இம்முறையை தங்களது சீடர்களின் மூலம் ஒரு பாரம்பரியமாக தொடரச் செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஆண்களின் வலது கை பெருவிரல் ரேகையின் அமைப்பைக் கொண்டும், பெண்களின் இடது கை பெரு விரல் ரேகையின் அமைப்பைக் கொண்டும் அவர்களுக்குரிய ஓலைச்சுவடியைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் அவர்களின் பெயர், தாய், தந்தையர், சகோதர, சகோதரிகளின் பெயர்கள், அவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குள்ள சொத்து, கல்வி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை துல்லியமாகத் தெரிவிப்பதாக கூறுகிறார். இந்த விவரங்கள் அனைத்தும் சரியாக கண்டறியப்பட்டப் பின்னரே ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றோம் என்றார்.
 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் 108பெருவிரல் ரேகைப் பதிவுகளுக்குள் அடங்குவதாகக் கூறிய பாபுசாமி, இந்த 108 பிரிவுகளுக்குள் சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும், ஒருவருடைய பெருவிரல் ரேகை அமைப்பைக் (வடிவைக்) கொண்டே அந்த நபருக்குரிய ஓலைச் சுவடி கண்டுபிடிக்கப்படுகிறது என்றார்.
ஒருவருடைய பெருவிரல் ரேகை பதிவு, மற்றவர்களுடைய ரேகைப் பதிவில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. பெருவிரல் ரேகை வடிவத்தைக் கொண்டு அதனைப் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.
ஒரு ரேகைப் பதிவின் வடிவத்தைக் கொண்டு அதற்குரிய ஓலைச் சுவடிக் கட்டை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த கட்டில் உள்ள ஓலைச் சுவடிகளில் இருந்து கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைப் பெற்று அந்த நபருக்குரிய சரியான ஓலைச் சுவடியை கண்டுபிடிக்கின்றனர்.
|