சாலையில் நடந்து போகும்போது தெரு நாய் ஒன்று உங்களைக் கடித்துவிட்டது அல்லது நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாயின் பல் பட்டு உங்களுக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நோயைத் தடுக்க குக்ரேல் நாலா எனும் கால்வாயில் (சாக்கடை என்றே அழையுங்கள்) இறங்கி குளித்தால் போதும். நம்ப முடிகிறதா?
உத்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள பைசாபாத் சாலையில் இந்த சாக்கடை கால்வாய் ஓடுகிறது. அதில் நாய்க்கடிக்கு சிகிச்சையாக பலரும் இறங்கி குளித்துள்ளனர்.
லக்னோவில் மட்டுமல்ல, அம்மாநிலத்தின் பல்வேறுப் பகுதிகளிலும் நாய்க்கடிக்கு ஆளானவர்கள் இங்கு வந்து குளித்துவிட்டுப் போகின்றனர்.
ஐ.ஏ.எஸ். போன்ற அரசு உயர் அதிகாரிகள் சிலர் கூட நாய்க்கடி பட்டப்பின் இங்கு வந்து குளித்துச் சென்றதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த கால்வாயின் ஒரு பக்கத்தில் சேரிப் பகுதியாக உள்ளது. அதன் இடதுப் பக்கத்தில் தான் இப்படி நாய்க்கடிப்பட்டவர்கள் இறங்கிக் குளிக்கின்றனர்.
இந்தக் கால்வாய் லக்னோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பக்சிகா தாலாப் என்று அழைக்கப்படும் குளத்தில் இருந்து உருவாகி பைசாகுண்ட் அருகில் உள்ள கோமதி பைராஜில் சென்று கலக்கிறது.
குக்ரேல் நாலா என்று ழைக்கப்படும் இந்த கால்வாயில் பைசாபாத் சாலையில் அமைந்துள்ள பாலத்திற்கு கீழே சென்று குளித்தால் நாய்க்கடியால் உடலில் ஏறும் விஷம் முறிந்துவிடுகிறது என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இவ்விடத்திற்கு வந்து பார்த்தால் நாய்க்கடி பட்டவர்கள் இங்குப் 'புனித நீராட' வரிசையில் நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம். இங்கு குளித்தப் பிறகு கோதுமையும், பருப்புப் பொடிகளை வெள்ளப் பாகில் கலந்து சிறப்பு பூஜை செய்கின்றனர். இந்த பூஜை செய்வதற்கென்றே அங்கு சிலர் இருக்கின்றனர்.
|