ஆறாவது அறிவை அடிக்கடி பயன்படுத்தி அருகிலிருப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும் நீங்கள், நடுநிலையுடன் எல்லாப் பிரச்சனைகளையும் அலசி ஆராய்வதில் வல்லவர்கள் நீங்கள்தான்.
இதுவரையில் ராசிக்கு ஆறாவது வீட்டில் ராகுவும், பனிரெண்டாவது வீட்டில் கேதுவும் இருந்துகொண்டு உங்களுக்கு ஓரளவு உதவினார்கள் அல்லவா, இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு எவ்வாறு மாற்றங்களை கொடுக்கப்போகிறார்கள் என்பதனை பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்று ஒரு பக்கம் நல்லதே செய்தாலும் மற்றொரு பக்கம் வீண் குழப்பங்கள், மறைமுக எதிரிகள், கடன் பிரச்சனைகள் என்று பல விதங்களில் அல்லல்படுத்திய ராகு, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், உங்களின் யோகாதிபதியான சனியின் வீட்டில் நிற்பதால் பணப் பற்றாக்குறையை நீக்குவார். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குடும்ப வருமானம் உயரும். தாழ்வு மனப்பான்மை விலகும். உற்றார் உறவினர்களின் குணத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.
கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தாரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்பதை உணர்ந்து நடப்பீர்கள். வீண் டென்சன், அலைச்சல், முன் கோபம் குறையும். மனைவி உங்களை அனுசரித்து நடப்பார்கள். உறவினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் வழி உறவினர்கள் உதவுவார்கள்.
9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய கொஞ்சம் நிதானமாக செயல்படப்பாருங்கள். வீண் செலவுகள் கையைக் கடிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது. மறதி வந்து நீங்கும். கெட்டவர்களை விட்டு விலகுவது நல்லது. உங்களின் மனக்கஷ்டங்களை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம். எந்த ஒரு முடிவையும் தீரயோசித்து முடிவெடுங்கள். 11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் ஆசைகள் பூர்த்தியாகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். வெகு நாட்களாக போக நினைத்த குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.
பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஆழமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. தாய்வழி உறவினர்களின் குணமறிந்து நடப்பீர்கள். மகனுக்கு நல்ல உத்யோகம் அமையும். வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ- மாணவிகளுக்கு கவிதை, கலை, கற்பனைகள் அதிகரிக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டி வரும். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு பெருகும். வேலையாட்களின் அன்புத் தொல்லைகள் விலகும். சொந்தமாக வீடு ஒன்றை கட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களை பழித்துப் பேசியவர்கள் இனி பாராட்டுவார்கள். வெளிநாட்டுப் பயணம் சென்று வருவீர்கள்.