ஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தருமென நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டீர்கள்.
உங்களுக்கு இதுவரை ஓரளவு நல்ல பலன்களை அளித்து வந்த ராகுவும், கேதுவும் 9.4.2008 முதல் 27.10.2009 முடிய உள்ள காலகட்டங்களில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி, பங்கு வர்த்தகத்தில் லாபம் தந்து வந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். 9.4.2008 முதல் 10.6.2008 முடிய உங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்திலும், 11.6.2008 முதல் 21.4.2009 வரை சுகாதிபதியின் சாரத்திலும், 22.4.2009 முதல் 27.10.2009 முடிய உள்ள காலக் கட்டத்தில் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் சாரத்திலும் செல்வதால் இனி நல்லதே நடக்கும்.
6.12.2008 முதல் 27.10.2009 முடிய உள்ள காலங்களில் ராகுவுடன் குரு சேர்வதால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். இந்த ராகு சுயமாக தொழில் செய்யும் சக்தியை கொடுப்பார். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி வேற்று மதத்தவர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கும் அளவிற்கு பணம் வரும்.
மூத்த சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என வருந்தினீர்களே, இனி அவர்கள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்வார்கள். பழைய நண்பர்களிடம் கருத்துவேறுபாடுகள் இருந்ததே, இனி அவர்கள் வீட்டு கல்யாணக் காரியங்களை எடுத்து நடத்தும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அரசாங்கத்துடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும்.
ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மகளின் திருமணப் பேச்சு வார்த்தையில் இருந்த சிக்கல் நீங்கி சுமுகமாக முடியும். பல இடங்களில் விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லையே என வெறுப்புடன் இருந்தவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலைக் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
வியாபாரத்தில் தராதரம் அறிந்து செயல்படுவீர்கள். பழைய பாக்கிகளை நயமான பேச்சால் வசூலிப்பீர்கள். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வேலையாட்களின் ஆதரவும் பெருகும். பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து புரட்சிகரமாக முடிவு எடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இடமாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கௌரவப் பட்டம் கிடைக்கும்.