பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாமே நிர்ணயிக்கப்பட்டதுதான். அதுபோலத்தான் அகால மரணமும்.
ஜாதகத்தில் எடுத்துக் கொண்டால் ஆயுள் பாவம் என்று ஒன்று உள்ளது. 8வது இடம்தான் ஆயுள் பாவம். அதாவது ஜென்ம லக்னத்தில் இருந்து 8வது இடம் ஆயுள் பாவம்.
பொதுவாக ஆயுளுக்குரிய கிரகமாக சனி அதாவது ஆயுள் காரகன். ஆயுள் ஸ்தானத்திற்குரிய கிரகமோ அல்லது சனியோ வலுவாக இருந்தால் தீர்க்காயுசு யோகம் என்கிறோம்.
8வது வீட்டிற்குரியவனும் கெட்டு, சனியும் கெட்டிருந்தால் குறையாயுள் யோகம். துர்மரணம் ஏற்படும்.
காக்கையர் நாடி போன்ற பழைய நூல்களில் வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறப்பான், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வான், விஷத்தால் இறப்பான், தீயால் இறப்பான் என்பது போன்ற கொடூர மரணங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.
சிரசு எடுக்கப்பட்டு மரணமடைவான் என்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த லக்னத்தில், இந்த ராசியில், இந்த திதியில் பிறந்தவன் இந்த லக்னத்தில், இந்த திதியில் மாலைப் பொழுதில் இந்த நொடிப் பொழுதில் இறப்பான் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதையெல்லாம் வைத்து ஆராய்ந்துப் பார்த்ததில் ஒத்துப்போனதும் உண்டு. ஒத்துப்போகாததும் உண்டு. துர் மரணம் என்பதும் நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான்.
உதாரணத்திற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பட அதிபரின் ஜாதகத்தைப் பார்த்ததில் அவருக்கு குறை ஆயுள் என்பது கணிக்கப்பட்டது.
அதை அவரிடம் கூறி பரிகாரம் செய்யச் சொன்னோம். ஆனால், எங்கள் வீட்டில் எல்லோரும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள். அதனால் எனக்கு அவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார்.
அவருக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். பிறகு ஒரு மகன் பிறந்தான். அதாவது சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தான். பிறந்த உடன் எனக்கு தகவல் சொன்னார்கள். மகனின் நேரம் எப்படி இருக்கு என்று கேட்டார்.
அவர் வேறு எங்கோ சென்றிருந்தார். அங்கிருந்து என்னிடம் பேசினார்.
சித்திரையப்பன் தெருவிலே என்று சொல்வார்கள். எனவே இப்போதைக்கு நீங்கள் மகனைப் பார்க்க வர வேண்டாம். 10 நாட்கள் கழித்து வந்து பாருங்கள் என்று சொன்னேன். புண்ணியாகிரகம் எல்லாம் முடித்துவிட்ட பிறகு வாருங்கள் என்று சொன்னேன்.
ஆனால் தன் மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் உடனடியாக புறப்பட்டு வந்த அவர், வரும் வழியிலேயே கார் விபத்தில் சிக்கி இறந்தார்.
ஒருவருக்கு துர் மரணத்திற்கான அமைப்பு இருந்தாலும், அவரது மனைவி மற்றும் மகனது ஜாதகத்தின் வலிமையால் அவரது துர் மரணத்திற்கான வாய்ப்பு குறையலாம்.
35 வயதில் ஒருவருக்கு துர் மரணம் ஏற்படும் என்று இருக்கும். ஆனால் அவருக்குப் பிறகும் மகன் நல்ல ஜாதக அமைப்பில் பிறந்திருந்தால் 40 அல்லது 42 வயது வரை அவர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
பொதுவாக ஒரு மகனின் ஜாதகத்தில் தந்தையின் மரணம் பற்றி கூறப்பட்டிருக்கும் என்கிறார்கள். ஆண் பிள்ளையே இல்லாதவர்களுக்கு இது எப்படி கணிப்பது?
|