நேற்று இரவு வாசன் என்ற கல்லூரி பேராசிரியர் வந்திருந்தார். தனது மனைவியின் ஜாதகத்தைக் கொண்டு வந்திருந்தார்.
அதைப் பார்த்துவிட்டு, எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இப்போது கேன்சர் இருக்கிறது என்றேன்.
அவர் உடனே என் கையைப் பிடித்துக் கொண்டு அதை எப்படி சொல்கிறீர்கள்? கேன்சர் இருக்கிறது என்று குறிப்பாக சொல்ல முடியுமா என்று கேட்டார்.
அதற்கு, உங்கள் மனைவி தனுசு லக்னத்தில் பிறந்துள்ளார். இப்போது அவருடைய லக்னாதிபதி குருவுடன் ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கின்றன. அப்படி இருந்தால் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் என்றேன்.
உடனே அவர், திருமணத்திற்கு முன்பு இந்த ஜாதகத்தைக் காண்பித்திருந்தால் புற்றுநோய் வரும் என்று கூறி திருமணம் செய்யக் கூடாது என்று அப்போதே சொல்லியிருப்பீர்களா என்று கேட்டார்.
ஆமாம் என்றேன்.
இரண்டு பேரின் ஜாதகத்தைப் பார்க்கும்போது ஒருவருக்கு இதுபோன்ற பிரச்சினை இருந்தால் இந்த ஜாதகம் வேண்டாம் என்று மட்டுமே கூறுவோம். மற்றபடி இந்த விஷயங்களைச் சொல்வதில்லை. நம்மிடம் வந்தவர்கள் - ஜாதகத்தை கொடுத்தவர்களிடம் இதனைச் சொல்லி பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்பதால் அதனை சொல்வதில்லை.
அந்த பேராசிரியர் தனது மனைவியின் ஜாதகத்தை எங்கெங்கோ எல்லாம் காண்பித்துவிட்டு கடைசியாக இங்கு வந்துள்ளார். ஒரு வி.ஐ.பி.தான் உங்களது முகவரியை கொடுத்ததாகவும், அவரது பெயரை சொல்லவேண்டாம் என்றும் கூறினார்.
புற்றுநோய் இப்போதுதான் துவங்கியுள்ளதா என்று கேட்டார். இல்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் ஆரம்பித்துவிட்டது. இப்போது சிகிச்சை அளித்து குணமாக்கிவிடுவீர்கள். நன்றாக இருப்பார்கள்.
|