1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (10:48 IST)

உசிலம்பட்டி பெண் போலீஸ் தற்கொலையில் திருப்பம் : பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர்

போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தான் , உசிலம்பட்டி பெண் போலீஸ்  தற்கொலை முடிவினை எடுத்தது விசாரணையில்  தெரியவந்துள்ளது.


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  குஞ்சாம்பட்டி  கிராமத்தை சேர்ந்தவர் ி அமுதா (35). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.  இவருடைய  கணவர் முத்துவாளன் (வயது 40) ஆட்டோ டிரைவராக. உள்ளார்.
 
இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 24–ந்தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அமுதா வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அமுதாவிற்கு, போலீஸ்காரர் ஆறுமுகம் என்பவர் சமூக வலைதளம் வழியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் கண்டு பிடித்தனர். 
 
தேனூரை சேர்ந்த போலீஸ்காரர் ஆறுமுகம் (35) என்பவர் அடிக்கடி அமுதாவுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
 
ஆறுமுகமும், அமுதாவும் 2010–ம் ஆண்டு போலீஸ் பணிக்கு தேர்வாகியுள்ளனர். ஒரே நேரத்தில் தேர்வான அவர்கள், மதுரை ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தனர். அப்போது அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்துள்ளனர். பக்கத்து வீடு என்பதால் அமுதா, ஆறுமுகத்திடம் நட்பாக பழகி வந்துள்ளார். அதன்பின்பு ஆறுமுகம் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கும், அமுதா வாலாந்தூர் போலீஸ் நிலையத்திலும் வேலை செய்து வந்தனர்.
 
அதன்பின்னரும் அமுதாவுடன், ஆறுமுகம் அடிக்கடி செல்போனில் பேசுவதும், குறும்படங்கள் அனுப்புவதுமாக இருந்துள்ளார். மேலும் அமுதாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரியவருகிறது. இந்தநிலையில் கடந்த 24–ந்தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்ட ஆறுமுகம், அமுதாவின் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்பின்பு 2 மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட அவர், வீட்டின் முன்பு நிற்பதாக அமுதாவிடம் கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அமுதா அன்றைய தினம் இரவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
 
இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் நேற்று கைது செய்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.