1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2015 (20:42 IST)

கடலூரில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் திருமணம் நிறுத்தம்

கடலூர் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை [22-10-15] நடைபெறவிருந்த 2 குழந்தைத் திருமணங்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
 

 
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் (27) என்பவர், சிங்கப்பூரில் எலக்ட்ரிசனாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் கம்மாபுரம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிற்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.
 
இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாருக்கு புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விருத்தாசலம் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோ விசாரணை மேற்கொண்டனர். உண்மையை அறிந்ததும் அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
 
மேலும், அதே கோயிலில் இன்று வியாழக்கிழமை [22-10-15] மற்றொரு குழந்தைத் திருமணம் நடக்கவிருந்ததும் தெரிய வந்தது. திட்டக்குடி அருகே உள்ள கொட்டாக்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தராசு (26). இவரும் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார்.
 
இவருக்கும் விருத்தாசலம் கோ.மங்கலத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நடைபெற உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து 2 திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் நிறுந்துமாறு கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.