வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 6 ஜூன் 2015 (15:03 IST)

பிரபாகரன் கோவில் இடிப்பு; தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என ராமதாஸ் கண்டனம்

பிரபாகரன் கோவில் இடிக்கப்பட்டது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து இன்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர்.
 

 
அந்த ஊரில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை இருந்த இடத்தின் மீது வெள்ளை வர்ணம் பூசி அங்கு சிலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் அழித்துள்ளனர்.
 
காவல்துறையின் இந்த அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தான் பிரபாகரன் சிலை அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் இனத்தைக் காத்தவர் என்ற அடிப்படையில், மற்ற குலசாமிகளுக்கு எப்படி சிலை அமைக்கப்பட்டதோ, அதேபோல் பிரபாகரனுக்கு ஊர் மக்கள் சிலை அமைத்துள்ளனர்.
 
இது முழுக்க முழுக்க ஊர்மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். இதில் தமிழக அரசோ, காவல் துறையோ தலையிட எந்த உரிமையும் இல்லை. தமிழ் இனத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் இந்தப் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
 
தெற்கு பொய்கை நல்லூரில் அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.