வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2015 (12:51 IST)

பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை இயக்க நடுரோட்டில் தள்ளிய அன்புமணி

தருமபுரியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற, அரசுப் பேருந்தை இயக்க, மக்களோடு மக்களாக, அந்த பேருந்தை நடுரோட்டில் தள்ளி, மீண்டும் இயங்க உதவிபுரிந்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.
 
தருமபுரியில், நகரப் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு அரசுப் பேருந்து தாசரஅள்ளியை நோக்கி புறப்பட்டது.
 
பேந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த பேருந்து, சில அடி தூரத்தில், பழுதாகி அப்படியே நடு ரோட்டில் நின்றுவிட்டது.
 
இதனால், அப்பேருந்தை இயக்கும் வகையில், அந்த பேருந்தில் இருந்த பயணிகள் பலர், பேருந்தில் இருந்து கீழே இறங்கி, அதைத் தள்ளி இயக்க முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.
 
அப்போது, அந்த வழியாக ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற, பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி எம்பியுமான அன்புமணி, பயணிகள் பேருந்தில் இருந்துகீழே இறங்கி பேருந்தை தள்ளியதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.
 
இதனையடுத்து, அந்த பேருந்தை இயக்க தானும் உதவி செய்வதாக கூறி, காரில் இருந்து கீழே இறங்கி, அந்த அரசுப் பேருந்தை மக்களோடு மக்களாக தள்ளினார். தகவல் அறிந்த பாமகவினரும் அங்கு குவிந்தனர். அவர்களும் அன்புமணியுடன் இணைந்து அந்த பேருந்தை தள்ளினர்.
 
சிறிது தூரம் சென்றவுடன் அந்தப் பேருந்து மீண்டும் இயங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த பயணிகள் அன்புமணிக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்பு, மீண்டும் தனது காரில் ஏறி குறிப்பிட்ட நிகழ்ச்சில் கலந்து கொள்ள அன்புமணி பறந்து சென்றார்.
 
அன்புமணியின் இந்த அன்புமிக்க செயல் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் மனதில் மட்டும் அல்லாது, அங்கிருந்தவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது.