கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 72 மணி நேர உண்ணாவிரதம்
செவ்வாய், 21 பிப்ரவரி 2012( 11:22 IST )
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றியும், அப்பகுதி மக்களின் அச்சம் பற்றியும் விரிவாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு, அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரடியாக சந்தித்து கருத்துக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கூடங்குளம் பகுதி மக்கள் நேற்று நள்ளிரவு தொடங்கியுள்ளனர்.
செட்டிகுளம், இடிந்தகரை, பைராவி கிணறு, கூத்தங்குளி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அணு மின் நிலையம் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்த கிராமங்களில் உள்ள கோயில்கள், தேவாலயங்களிலும் நேற்றிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம், அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு செல்லவில்லை. இதேபோல் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.