கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை - ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
வியாழன், 22 செப்டம்பர் 2011( 08:38 IST )
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தனர்.
அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்த அவர்கள், இதுதொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று இன்று தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என்றும், கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நியூயார்க்கிலிருந்து வரும் 27-ந் தேதி திரும்பிய பிறகு, அவரை சந்திப்பதற்கு வசதியான நாளைப் பெற்று, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக குழு டெல்லிக்கு சென்று, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கும் என்றும், பிரதமர் இந்தியா திரும்பிய பின், பிரதமருடன் முதலமைச்சர் தொலைபேசியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.