சமச்சீர் கல்வி நிபுணர் குழுவின் வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவு
செவ்வாய், 12 ஜூலை 2011( 12:06 IST )
சமச்சீர் கல்வி நிபுணர் குழுவின் வரைவு அறிக்கையும், அதன்மீது ஒவ்வொரு உறுப்பினரும் தெரிவித்த கருத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஆராய்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜூன் 14ஆம் தேதி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அந்த அறிக்கை மீது ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழு 766 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை கடந்த 5ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் மீது 7ஆம் தேதி விவாதம் நடந்தது.
இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதிடி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சமச்சீர் கல்வி திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதாடுகையில், தேசிய அளவில் கல்வியை மறுசீரமைப்பு செய்வதற்காக 1983ஆம் ஆண்டு பேராசிரியர் யெஸ்பால் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதைத்தொடர்ந்து, இந்தியாவில் தமிழகத்தை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் மாநில பாடத்திட்டம் மத்திய செகண்டரி கல்வி திட்டம் என இரண்டு விதமான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
ஆனால், தமிழகத்தில் மட்டும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நீங்கலாக, ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் என்று 4 விதமான பாடத்திட்டங்கள் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேல்நிலைக் கல்வியில் மட்டும் ஒரே பாடத்திட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், 4 விதமான பாடத்திட்டங்கள் இருப்பதால் அது மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கக்கூடாது என்பதற்காகவும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்விமுறை வழங்க வேண்டும் என்ற சமூகநீதி நோக்கிலும் 30.4.2010 அன்று சமச்சீர் கல்வி சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்படி சமூகநீதி நோக்கில் அப்போதைய அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை புதிய அரசு 21.5.2011 அன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தது.
ஆனால், அமைச்சரவை கூட்டத்திற்கு ஒருநாள் முன்பாகவே அதாவது 21.5.2011 அன்றே பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடுவதற்கு டெண்டர் விடப்பட்டது. முந்தைய அரசு ஏற்கனவே ரூ.200 செலவில் 9 கோடி சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டுவிட்டது. இதற்கிடையே, சமச்சீர் கல்வி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பான வழிவகைகளை ஆராய நிபுணர் குழுவை அமைëக்குமாறு 14.6.2011 அன்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, 17.6.2011 அன்று தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. அன்றைய தினமே அதன் முதல் கூட்டம் நடந்தது. ஜூன் 17, 22, 23, 29 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே நிபுணர் குழு கூடியது. இன்னும் சொல்லப்போனால், மொத்தத்தில் 15 மணி நேரம் மட்டுமே அவர்கள் விவாதித்துள்ளனர். ஒரு கோடியே 35 லட்சம் மாணவ-மாணவிகளின் நலனை, வெறும் 15 மணி நேரத்தில் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா?
உறுப்பினர்களிடம் கருத்து கேட்காமலேயே வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளது. சமச்சீர் கல்வியை கொண்டுவரக்கூடாது என்று முன்பே முடிவெடுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டது. சமச்சீர் கல்வி பிரச்சனை தொடங்கி 45 நாட்கள் ஆகியும் ஒரு கோடியே 35 லட்சம் மாணவ-மாணவிகள் என்ன பாடத்திட்டம் என்பதுகூட தெரியாமல் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடாதுகூடாது என்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு குறித்து ஆசிரியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும்தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை எல்லாருமே வலியுறுத்தினார்கள். அப்படி இருக்கையில், ஒரு கோடியே 35 லட்சம் மாணவ-மாணவிகள் என்ன படிக்க வேண்டும் என்பது தெரியாமலேயே பள்ளிக்கூடத்திற்கு சென்றுவருவது எந்த வகையில் நியாயம்? என்று பிரபாகரன் வாதாடினார்.
ஒரு மணி நேரம் நடந்த வாதத்திற்கு பின்னர் தலைமை நீதிபதி இக்பால், ''வழக்கு விசாரணையை எப்போது வைத்துக்கொள்ளலாம்?'' என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனிடம் கருத்து கேட்டார். அதற்கு அவர், ''அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.பி.வாவ் ஆஜராக வசதியாக வழக்கு விசாரணையை 18ஆம் தேதி வைத்துக்கொள்ளலாம்'' என்று பதில் அளித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, ''அவ்வளவு காலத்திற்கு வழக்கை தள்ளிவைக்க முடியாது. இந்த வழக்கை எப்படியும் இந்த வாரத்தில் முடித்தாக வேண்டும்'' என்று கண்டிப்புடன் கூறினார். வழக்கு விசாரணை நாளை (இன்று) தொடர்ந்து நடைபெறும் என்றும், அப்போது, சமச்சீர் கல்வி நிபுணர் குழு வரைவு அறிக்கையையும், அதன் மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளையும், நிபுணர் குழுவின் 4 நாள் கூட்ட நிகழ்வு பற்றிய விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.