திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. திருச்செந்தூரில் முதல் வேட்பாளராக டாக்டர் பத்மராஜன் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. திருச்செந்தூர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
வந்தவாசி (தனி) தொகுதியில் தேர்தல் அதிகாரியாக செய்யாறு சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.வேட்பு மனுக்கள் சனி, ஞாயிறு நீங்கலாக மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.
அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள் நாளை தங்கள் மனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க வேட்பாளர்களும் ஓரிரு நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.
திருச்செந்தூர் தொகுதியில் முதல் வேட்பாளராக இன்று சுயேச்சை வேட்பாளர் டாக்டர் பத்மராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் அனைத்து தேர்தல்களிலும் சுயேச்சையாக போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.