சென்னையில் 10 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோயினை தடுப்பதற்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் இன்று தேங்கி கிடந்த மழை நீரை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலநிலையில் 40 செ.மீட்டராக இருந்த மழை அளவு, தற்போது 30 செ.மீட்டர் அளவில்தான் உள்ளது.
மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 3 ஆண்டுகளில் 149.58 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ. 81 கோடியே 76 லட்சம் செலவில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டியுள்ளது. அதே போன்று 996 கி.மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
இதனால் தென்சென்னை பகுதிகளான தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலை, சாந்தோம், வேளச்சேரி, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குவது கடந்த ஆண்டுகளை காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது.
வட சென்னை பகுதியில் வியாசார்பாடி, கணேஷ்புரம், புளியந்தோப்பு, ஓட்டேரி இடங்களிலும், சுரங்கப்பாதைகளிலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கத்தை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றம் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
தற்போது வரை முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கும் நிலை உருவாகவில்லை. இருப்பினும் மாநகராட்சி முகாம்களில் பொது மக்கள் தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான உணவு வழங்க தயார் நிலையில் மாநகராட்சி உள்ளது.
சென்னையில் 10 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோயினை தடுப்பதற்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.